கையெழுத்தே இல்லாமல் தகுதிநீக்க பட்டியலை வெளியிட்ட சபா... என்ன நடக்குது தமிழ்நாட்டில்?!
தமிழக முதல்வர் எடப்பாடியாருக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்ததால் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடி உத்தரவை சற்று முன் வெளியிட்டார்.
ஜெயலலிதா மறைந்த அதே நாளில் அவசர அவசரமாக தற்காலிக முதல்வராக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த ஓபிஎஸ், ஸ்டாலினை பார்த்து சிரித்தார் என்ற ஒரே காரணத்திற்காக ஓபிஎஸின் பியூஸை புடுங்கி இபிஎஸ்சுக்கு கொடுத்தார் சசிகலா.
சசியின் அரியணை கனவில் மண்ணைவாரி போட்ட டெல்லி வட்டாரம் எடப்பாடியையும் தங்கள் வசப்படுத்திக்கொண்டு இலையை முடக்கி தினகரனுக்கு குல்லாப்போட்டு ஆர்கே நகரில் ஆட்டம் போடவைத்தது. ஓட்டுக்கு துட்டு என்ற ஒரே காரணத்திற்காக தேர்தலையும் தள்ளிவைத்துவிட்டு திகாருக்கு இழுத்துச்சென்றது டெல்லிவட்டாரம்.
டெல்லியின் அடுத்தடுத்த அதிரடியால் மிரண்டுபோன எடப்பாடியார் டெல்லியிடம் பொட்டிப் பாம்பாய் அடங்கிப்போனார்.
விஜயபாஸ்கர் வீட்டில் விட்ட ரெய்டிற்குப் பிறகு அரண்டுபோன ஆட்சியாளர்கள், எதிர்த்து செயல்பட்டால் எங்கே ரெய்டு விட்டுவிடுவார்களோ என்ற பயத்திலே அடங்கிவிட்டனர். டெல்லி என்ன எல்லாம் சொல்கிறதோ சரிங்கய்யா.. சரிங்கய்யா என சிறந்த அடிமையாக செயல்பட்டது இங்கே உள்ள அரசு.
டெல்லியின் அடுத்த மூவ்.. பழனிச்சாமியையும் பன்னீர்செல்வத்தையும் இணைத்து, சசி குடும்பத்தை விரட்டுவதுதான். அணிகள் இணைப்பை செவ்வனே செய்த டெல்லி, அணிகள் இணைந்த அடுத்த கணமே சசி குடும்பத்தை விரட்டுவதற்கான காய்களை நகர்த்த பணித்தது. டெல்லி சொல்வதை அப்படியே கேட்ட முதல்வரும் அவரது துணையும் பொதுக்குழுவை கூட்டி சசியையும் தினகரனையும் கட்சியிலிருந்து தூக்கி அடித்தார்கள்.
எல்லாம் முடிந்துவிட்டது.. ஒன்றும் பிரச்னையில்லை என நினைத்து நிம்மதி பெருமூச்சு விடலாம் என்று பார்த்தால் இந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களால் சற்று பிரச்னையாகவே இருக்கிறதே என நினைத்த பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் அவர்களை தகுதிநீக்கம் செய்ய திட்டமிட்டு அதன்படியே சபாநாயகரை வழிநடத்தி அதையும் செய்துவிட்டனர்.
இதில் என்ன கொடுமை என்றால், தகுதிநீக்கம் செய்து வெளியிட்ட அறிக்கையில் சபாநாயகர் கையெழுத்து போடலயாம்.. என்ன கொடுமடா இது?
சபாநாயகரின் மைண்ட்வாய்ஸ்:
தகுதிநீக்கம் செய்து அறிக்கை தானே வெளியிட சொன்னாங்க? அதுல கையெழுத்து போட சொல்லலியே?