டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி வேலுமணி வங்கி கணக்கு முடக்கம்.. அலறவிட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ்.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உடன் கலந்து ஆலோசித்து தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு உரிய விளக்கம் அளிப்பேன் என எஸ். பி வேலுமணி நேற்று கூறியிருந்தார்.
டெண்டர் முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணி வங்கிக் கணக்கு மற்றும் லாக்கர்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.பி வேலுமணி வீட்டில் நடத்திய சோதனையை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இந்நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் செவ்வாய்க் கிழமை காலை திடீர் சோதனை மேற்கொண்டனர். மொத்தம் 52 இடங்களில் அந்த சோதனை நடைபெற்ற நிலையில் இறுதியாக அது 60 இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
ஏற்கனவே முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து எஸ்.பி வேலுமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. நேற்று காலை ஆரம்பிக்கப்பட்ட சோதனை மாலை 6 மணி வரை நீடித்தது. எஸ்.பி வேலுமணி அமைச்சராக இருந்தபோது மாநகராட்சி ஒப்பந்த பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பல கோடி மோசடி செய்ததாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், இந்த சோதனை நடைபெற்றது. குற்றத்திற்கு முகாந்திரம் இருப்பதாக கூறி, எஸ். பி வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன், ஜேசிபி பொறியாளர்கள் கே.சந்திரபிரகாஷ், ஆர்.சந்திரசேகர், ஆர்.முருகேசன், ஜேசு ராபர்ட் ராஜா உள்ளிட்ட 17 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தொடர்புடைய 10 நிறுவனங்களின் மீதும் வழக்கு பதிவாகியுள்ளது.
சென்னை கோவை திண்டுக்கல் என பரவலாக இந்த சோதனையும் நடைபெற்றதால், அதிமுக தொண்டர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதிகள் எஸ்.பி வேலுமணி இருந்த நிலையில் அவரிடம் போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இதனால் எம்எல்ஏ விடுதி வெளியில் ஆயிரக்கணக்கில் அதிமுகவினர் திரண்டனர். அப்போது அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். அப்போது போலீசாருக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதேபோல் கோவையில் எஸ். பி வேலுமணி வீட்டுக்கு வெளியே ஏராளமான அதிமுகவினர் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. அப்போது சில தொண்டர்கள் பேரிகார்டர்களை தூக்கி எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 10 எம்எல்ஏக்கள் உட்பட 520பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உடன் கலந்து ஆலோசித்து தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு உரிய விளக்கம் அளிப்பேன் என எஸ். பி வேலுமணி நேற்று கூறியிருந்தார். இந்நிலையில் அவரசு இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து அவரது வங்கிக் கணக்கு மற்றும் லாக்கர்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அதிமுக தொண்டர்களை மேலும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.