பெயரை மாற்றிய எடப்பாடி..! சோழி உருட்டிய கேரள பணிக்கர்.. சசிகலாவை அடக்கவா? ஓ.பி.எஸ்ஸை முடக்கவா?
தமிழக அரசியலில் கேரளாவை சேர்ந்த ‘பணிக்கர்கள்’ எனும் ஜோஸியர்களுக்கான சேவையை துவக்கி வைத்தவர் ஜெயலலிதாதான்
தமிழக அரசியலில் கேரளாவை சேர்ந்த ‘பணிக்கர்கள்’ எனும் ஜோஸியர்களுக்கான சேவையை துவக்கி வைத்தவர் ஜெயலலிதாதான். சோழிகளை உருட்டிப்போட்டு, பிரசன்னம் பார்த்து உன்னிகிருஷ்ண பணிக்கர் சொன்னபடிதான் ஜெயலலிதாவின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை செயல்படும். இதன் மூலமாகவோ அல்லது எதேச்சையாகவோ அவர் தொடர்ந்து வெற்றி பெற, பணிக்கருக்கான டிமாண்ட் பெருகியது தமிழக அரசியலில். அம்மாவின் கவனத்துக்குப் படாமல் பல அ.தி.மு.க.வினர் பணிக்கரை தரிசித்து, தங்களுக்கு பிரசன்னம் பார்க்கச் சொல்லி கதறினர்.
அதைவிட, பகுத்தறிவு பேசிய/பேசும் பலரும் கூட பக்கவாட்டு கதவு வழியே பணிக்கரின் இல்லத்தினுள் புகுந்து பிரசன்னம் பார்த்து தங்களின் நடை, உடைகளை மாற்றினர். சிலர் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள்ளே யாகம் வளர்த்தனர், சிலர் யாத்திரை போனார்கள். ஆனால் ஜெயலலிதாவின் இறுதி காலங்களில் மெதுவாக மறைந்த பணிக்கரை மீண்டும் ஃபீல்டுக்கு அழைத்து வந்திருக்கிறார் எடப்பாடியார்.
ஆனால் இது அதே உன்னிகிருஷ்ண பணிக்கரா என தெரியவில்லை. ஆனால் கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு இருந்தே பணிக்கரிடம் கைகோர்த்துவிட்டாராம் எடப்பாடியார். பணிக்கர் சொன்னபடியே தற்போது எல்லாவற்றையும் செய்யும் மாஜி முதல்வர், இப்போது உச்சகட்டமாக தன் பெயரையே மாற்றிவிட்டாராம்.
இது பற்றி வெளியாகியிருக்கும் ஸ்கூப் சொல்வது இதுதான்….
“2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே பணிக்கரை வைத்து தன் கட்சி வெற்றிக்காக யாகம் நடத்தினார். அப்போதே பழனிசாமியின் பெயரில் மாற்றத்தை செய்ய சொல்லி பணிக்கர் அட்வைஸ் செய்துள்ளார். ஆனால் அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் விட்டார். தேர்தலில் கட்சி தோற்றது, அதன் பின் சசிகலா மீண்டும் தலையெடுத்து ஆடும் ஆட்டம், கொடநாடு வழக்கு அச்சுறுத்தல்கள், பன்னீர் குடைச்சல்கள்! என்று கடும் மன சஞ்சலத்தில் எடப்பாடியாரின் நாட்கள் கழிகிறதாம்.
இதனால் சமீபத்தில் மீண்டும் ஒரு யாகத்தை நடத்தியுள்ளார் அதே பணிக்கரை வைத்து. அப்போது, பெயர் மாற்றத்தை பற்றி மறுபடியும் வலியுறுத்தினாராம் பணிக்கர். எடப்பாடியார் யோசிக்க, சோழியை உருட்டிவிட்டு சில விஷயங்களை சொல்லியிருக்கிறார் பணிக்கர். அதாவது எடப்பாடியாரின் ராசி கன்னி ராசி, ஹஸ்தம் நட்சத்திரம். குரு பெயர்ச்சிப்படி அந்த ராசிக்கு நல்ல சூழல்கள் இல்லை. ஆனால், அவரது மகனும் பேரனும் சிம்ம ராசியாம். பேரனின் நட்சத்திர யோகம்தான் எடப்பாடியாருக்கு நல்ல நேரத்தை ஓரளவுக்கு தம் கட்டி இழுத்துப் பிடிக்கிறதாம். இந்த சூழலில் நியூமராலஜி படி பெயரில் மாற்றத்தை உருவாக்கிவிட்டால் எதிர்காலத்தில் பெரிய வெற்றி உறுதி, மேலும் வழக்கு மிரட்டல்கள் நெருங்காது, உள் வட்ட எதிரிகளும் அடங்கிப் போவார்கள்” என்று சொல்லியிருக்காராம் பணிக்கர்.
விளைவு, எடப்பாடியார் தடாலடியாக தன் பெயரை மாற்றியுள்ளாராம். அதன்படி ஆங்கிலத்தில் அவரது பெயர் ‘பழனிசாமி’ (Palanisamy) அல்ல ‘பழனி சுவாமி’ (Palani Swamy) என்று மாறியுள்ளதாம்……
என்று நீள்கிறது அந்த ஸ்கூப்.
இதை ஸ்மெல் பண்ணிவிட்ட பன்னீர் மற்றும் சசி டீமினர் ‘பக்கத்து ஆட்டோவுல கண்ணாடிய சரி பண்ணினா நம்ம ஆட்டோ எப்படி ஸ்டார்ட் ஆகும் ஜீவாஆஆஆஆ’ என்று கிண்டலடிக்கின்றனர்.