உதயசூரியன் அழிக்கப்பட்டு வரையப்படும் குக்கர் சின்னம்!! மண்டை காய்ச்சலில் திமுக...
திருவாரூரில் வரையப்பட்டுள்ள திமுகவின் உதயசூரியன் சின்னத்தை அழித்துவிட்டு, குக்கர் சின்னத்தை டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வரைந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவின் முன்னாள் தென்மண்டல செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி ஆதரவாளர்கள் சார்பில், கருணாநிதியின் புகழஞ்சலி நிகழ்ச்சி திருவாரூரில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மு.க.அழகிரி கலந்து கொண்டார். அப்போது பேசிய மு.க.அழகிரி, திருவாரூரில் போட்டியிட ஆதரவாளர்கள் வலியுறுத்தினால் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார். திமுகவில் தன்னை இணைத்துக்கொள்ள ஸ்டாலினை பல முறை கெஞ்சியும், ஸ்டாலின் அழைப்பு விடுக்காத நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த திமுக, கருணாநிதியின் தொகுதியான திருவாருல் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. மு.க.ஸ்டாலின், திமுக தலைவரான பிறகு, சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், இந்த தேர்தல் அவரது தலைமைக்கான அங்கீகாரமாகவும் இது பார்க்கப்படுகிறது. திருப்பரங்குன்றம், திருவாரூரில் நான்கு முனை போட்டி உள்ளது. திமுக, அதிமுக, அமமுக, பாஜக என களத்தில் இறங்கியுள்ளன.
திமுகவுக்கு எதிராக பாஜக, அமமுக, அதிமுக போட்டியாக உள்ள நிலையில், திருவாரூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக மு.க.அழகிரி கூறியுள்ளார். இதனால், திமுகவுக்கு கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கை சரிவடையும் என்று கருத்து கூறப்பட்டு வருகிறது. ஆனாலும், திருவாரூரில் திமுக ஆதரவாளர்கள், பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இதனை அடுத்து, கட்சி சின்னமான உதயசூரியன் பல்வேறு இடங்களில் வரையப்பட்டு வருகின்றன.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான சென்னை, ஆர்.கே.நகரில் அதிமுக, திமுகவை எதிர்த்து டிடிவி தினகரனின் அமமுக கட்சி வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலிலும் வெற்றி பெறும் முனைவில் டிடிவி தினகரன் தரப்பு முனைப்பு காட்டி வருகிறது.
இந்த நிலையில், திருவாரூரில் வரையப்பட்டிருந்த திமுகவின் உதயசூரியன் சின்னத்தை, டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் அழித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், உதயசூரியன் சின்னம் அழிக்கப்பட்ட இடங்களில் குக்கர் சின்னத்தையும் அவர்கள் வரைந்தும் வருகிறார்களாம். உதயசூரியன் சின்னத்தை அழித்து விட்டு, குக்கர் சின்னம் வரையப்பட்டு வருவது தற்போது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.