ராசியப்பன் பாத்திரக்கடையாக மாறிய தமிழக அரசியல் களம்... ஆர்.கே.நகர் வாசிகளை வறுத்தெடுக்கும் வலைதள வாசிகள்!
ஆர்.கே நகரில் தினகரன் அமோக வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் 20 ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஹவாலா ஸ்டைலில், பணப்பட்டுவாடா செய்து தேர்தல் முடிந்ததும் பணம் தர்றோம் என வாக்குறுதி அளித்து வென்றுள்ளதாகவும். தமிழக அரசியல் களம் காசு கொடுத்து வெற்றியை வாங்கும் அளவிற்கு கேவலமான வியாபாரமாக மாறியதாக, அரசியல் விமர்சகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைதேர்தலில் சுயேச்சை வேட்பாளரான தினகரன் ஆளும்கட்சி வேட்பாளர் மதுசூதனன் மற்றும் எதிர்கட்சி வேட்பாளர் மருதுகணேஷ் ஆகியோரை வீழ்த்தி பிரமாண்ட வெற்றியை அடைந்திருக்கிறார். இரட்டை இலையும் உதய சூரியனும் வலிமையான சின்னங்கள் என்கிற கட்டுக்கதை தகர்க்கப்பட்டு ஒரு சுயேச்சை சின்னத்திடம் படுதோல்வி அடைந்துள்ளது. திமுக என்ற பலம் வாய்ந்த கட்சி டெபாசிட்டை இழந்துள்ளது கொடுமை.
குங்குமசிமிழ், சோப்பு டப்பா, குடம், தங்க மோதிரம், தங்க நாணயம் என புதுசு புதுசா தேர்தல் சமயத்தில் இலவசங்களை கொடுத்து வாக்கு கேட்கும் முறை இருந்தது. இதற்க்கு அடுத்து காசு கொடுத்து வாக்கு 1௦, 2௦, 5௦, 1௦௦ இப்படி இருந்த வோட்டுக்கான ரேட்டு ஐந்தாயிரம் பத்தாயிரம் என கன்னைகட்டும் அளவிற்கு விலைவாசி உயர்ந்துள்ளது. போகிற போக்கை பார்த்தால், வலுவான அரசியல் கட்சிகள் கூட தங்கள் வாக்கு வங்கியை காப்பாற்றிக்கொள்ள, இனி பணத்தை இறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அரசியல் இயக்கம் எல்லாம், இனி அரசியல் பொருளாதார இயக்கமாக மாறிவிடும் வேளை நெருங்கி கொண்டிருக்கிறது.
மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி, பொருளாதாரம், மருத்துவம் போன்றவற்றுக்கு செலவு செய்யாத, கடன் வாங்காத சமுதாயம் அமையும்போதுதான், ஓட்டுக்கு பணம் வாங்கும் நிலை மாறும். அதுவரை இந்த நிலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். மக்களை ஏழையாகவே வைத்திருக்கும் செயல்திட்டங்களை மாற்றாதவரை, ஓட்டுக்கு பணம் வாங்கும் கலாசாரம் மாறப்போவதில்லை. ஒவ்வொரு குடும்பத்திற்கும், அரசியல் வாதிகளிடம் இருந்து, தேர்தல் நேரத்தில்தான் நேரடியாக பணம் வருகிறது. அதை இழப்பதற்கு, யாரும் தயாராக இல்லை.
தேர்தலில் வெற்றி கோப்பை என்பது, மக்கள் மனதில் இருந்து வாங்கும் நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. மக்கள் மனம் என்பது ராசியப்பன் பாத்திரக்கடையாக மாறிவிட்டது. (அதாவது கோவில் படத்தில் சிலம்பம் போட்டியில் தோற்றுப்போன வடிவேலு காசுகொடுத்து கோப்பை ஒன்றை வாங்கிவந்து வெற்றிபெற்று வாங்கியதாக சொல்லுவாரே அப்படித்தான்) வெற்றி கோப்பை எல்லாம், இனி ராசியப்பன் பாத்திரக்கடையில், யார் அதிகமாக பணம் செலுத்துகிறார்களோ அவர்களுக்குதான்.
இப்படி பணத்தை வாரி இறைத்து வெற்றியை விலைகொடுத்து வாங்கியதற்க்குப் பின்னால் அசிங்கமான உண்மை ஒன்று உள்ளது. இவ்வளவு காலமாக மக்களை இந்த அவல நிலையில் வைத்திருக்கும் ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டிய சம்பவம். ஒரு ஓட்டுக்கு 25000, ஒரு வீட்டில் நான்கு என்றால் ஒரு லட்சம் பெரிய பணம் தானே குப்பத்து மக்களுக்கு?