துபாயிலிருந்து சென்னைக்கு குளிர்பான பவுடர்களில் கடத்தி வந்த ரூ. 1.20 கோடி மதிப்புள்ள 2.5 கிலோ தங்கம் பறிமுதல்.
அப்போது சென்னையில் உள்ள முகவரிக்கு 4 குளிர்பான பவுடர் பெட்டிகள், உடல் ஆரோக்கிய பொருட்கள் கொண்ட பார்சல் இருந்தது. இதன் மீது சந்தேகம் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் பார்சல்களை பிரித்து பார்த்தனர்.
துபாயில் இருந்து சென்னைக்கு குளிர்பான பவுடர்களில் கடத்தி வந்த ரூ. 1 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள 2.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பன்னாட்டு விமான நிலைய சரக்ககத்திற்கு வரும் விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சரக்கக பிரிவுக்கு வந்த பார்சல்களை ஆய்வு செய்தனர்.
அப்போது சென்னையில் உள்ள முகவரிக்கு 4 குளிர்பான பவுடர் பெட்டிகள், உடல் ஆரோக்கிய பொருட்கள் கொண்ட பார்சல் இருந்தது. இதன் மீது சந்தேகம் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் பார்சல்களை பிரித்து பார்த்தனர். அப்போது குளிர்பான பவுடர்களில் தங்கத்தை தூளாக்கி கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் குளிர்பான பவுடரில் இருந்து தங்கத்தை பிரித்தனர். அதில் ரூ. 1.20 கோடி மதிப்புள்ள 2.5 கிலோ தங்கத்தை கைப்பற்றினார்கள். மேலும் பார்சலில் இருந்த முகவரிக்கு சென்று பார்த்த போது போலியான முகவரி என தெரியவந்தது.
வெளிநாடுகளில் இருந்து பல வகைகளில் தங்கம் கடத்தி வருவதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து விடுவதால கடத்தல்காரர்கள் புதிய முறையாக குளிர்பான பவுடரில் தங்கத்தை தூளாக்கி கடத்தி வந்தது தெரியவந்தது. இது போல் நூதன முறையில் தங்கம் கடத்தல் சம்பவம் இதுவே முதல் முறையாகும். ஆனாலும் சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து கடத்தல் திட்டத்தை முறியடித்து உள்ள நிலையில் கடத்தலில் ஈடுபட்டது யார் என்று தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.