பா.ஜ.க.வில் ஐக்கியமான எஸ்.எம்.கிருஷ்ணா - மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டார் என காங்கிரஸ் குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிர்ச்சி வைத்தியம் அளித்த கர்நாடக முன்னாள் முதல் அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பா.ஜ.க. வில் இணைந்துள்ளார்.
கர்நாடாகாவின் முதல் அமைச்சராகவும், மத்திய உள்துறை அமைச்சரகாவும், பஞ்சாப் ஆளுநராகவும் பதவி வகித்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. அரசியலில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட இவர் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
வயது முதிர்வின் காரணமாக எஸ்.எம்.கிருஷ்ணா இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. ஆனால் பா.ஜ.க.வில் இணையவே அவர் காங்கிரஸில் இருந்து வெளியேறிதாகவும் தகவல் வெளியானது.இந்நிலையில் டெல்லி சென்ற எஸ்.எம்.கிருஷ்ணா, அமித்ஷா தலைமையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.
பா.ஜ.க.வில் இணைந்ததன் மூலம் எஸ்.எம்.கிருஷ்ணா மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்துப் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, " இந்த வயதில் தனது கொள்கைகளில் இருந்து அவர் விலகியது மிகப் பெரிய தவறு. அவருக்கு கட்சி அனைத்தையும் செய்து கொடுத்தது.
காங்கிரஸ் கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்களில் அவரும் ஒருவராய் இருந்தார். அவருக்கு அனைத்து விதமான பதவிகளும் வழங்கப்பட்டது. இந்த வயதில் ஏன் இந்த முடிவை அவர் எடுத்தார் எனத் தெரியவில்லை" இவ்வாறு அவர் தெரிவித்தார்.