sivaji festival - edappadi palanisamy ignored
சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவை திட்டமிட்டே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புறக்கணித்ததாக நிடிகர் திலகம் ரசிகர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதற்காக அடையார் சத்யா ஸ்டூடியோ எதிரே ஒதுக்கி கொடுத்தது தமிழக அரசு.
போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக கூறி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிவாஜி சிலையை மெரினா கடற்கரையில் இருந்து அகற்றி சிவாஜி மணிமண்டத்தில் அமைத்தது.
இந்த நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் இன்று திறக்கப்படும் என தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டது. இந்த மணிமண்டபத்தை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அரசின் இந்த அறிவிப்புக்கு நடிகர் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் ஆட்சேபம் தெரிவித்தனர். அது மட்டுமல்லாது, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க வேண்டும் என்றும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு காலத்தில் நடிகர் சிவாஜி கணேசனுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் கூறியிருந்தது.
இந்த நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைப்பார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை அமைச்சர்கள், திரையுலக பிரமுகர்கள் சூழ, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மண்மண்டப திறப்பு விழாவை திட்டமிட்டே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புறக்கணித்ததாக சிவாஜி கணேசன் ரசிகர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இன்று நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாதபோது சிவாஜி மணிமண்டப விழாவை புறக்கணிப்பது தவறு என்று இரு நாட்களுக்கு முன்பு அவர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
