சபரீசனுக்கு முக்கியத்துவம்... நிழலாய் சுற்றும் கார்த்திக்... ஒதுக்கப்படுகிறாரா கனிமொழி..?
திமுக ஆட்சியில் இருந்தால், டெல்லி விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு, முக்கிய நபர்களிடம் ஒப்படைக்கப்படும். நாஞ்சில் மனோகரன், டெல்லி சம்பத், முரசொலி மாறன் என பலரும், டெல்லியை கவனித்துக் கொண்டார்கள்.
திமுக ஆட்சியில் இருந்தால், டெல்லி விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு, முக்கிய நபர்களிடம் ஒப்படைக்கப்படும். நாஞ்சில் மனோகரன், டெல்லி சம்பத், முரசொலி மாறன் என பலரும், டெல்லியை கவனித்துக் கொண்டார்கள்.
முரசொலிமாறனின் மறைவுக்கு பிறகு, மத்திய அமைச்சர்களாக இருந்த தயாநிதி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர், கவனித்து கொண்டனர். கனிமொழி ராஜ்யசபா எம்.பி., ஆன பின், அவர் தி.மு.க.,வின் டெல்லி முகமாக அறியப்பட முயற்சித்தார். இப்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தி.மு.க.,வின் டெல்லி முகம் யார் என்ற கேள்வி, இங்குள்ள அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
பிரதமர் மோடியை சந்திக்க, முதல்வர் ஸ்டாலினுடன் யார் செல்வது என்பதில், டி.ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன் இடையே, போட்டி இருந்ததாக தெரிகிறது. அடுத்த நாள், சோனியா மற்றும் ராகுலை சந்திக்க ஸ்டாலினும், அவரது மனைவி மட்டுமே சென்றனர். ஸ்டாலின் மூத்த தலைவர்கள் யாரையும் உடன் அழைத்து செல்லாதது ஆச்சரியம் அளித்தது. இது, டெல்லியில் தி.மு.க.,வின் முகமாக, கட்சியின் மூத்த தலைவர்களை தவிர்த்து, புதிதாக ஒருவரை அதாவது சபரீசனை, ஸ்டாலின் தேர்வு செய்கிறார் என்பதை உணர்த்தியது.
டெல்லி பயணத்தின்போது சபரீசன் செல்லவில்லை. சபரீசனின் நிழல் என அழைக்கப்படுபவர் கார்த்திக். அண்ணா நகர் எம்.எல்.ஏ., மோகனின் மகன். தேர்தலுக்கு முன், சபரீசன் வீட்டில் 'ரெய்டு' நடந்தபோது, இவரது வீட்டிலும் நடந்தது. முதல்வரின் டெல்லி பயணத்தில், கார்த்திக் உடன் இருந்ததை பலரும் கவனிக்கவில்லை. கட்சி அலுவலகத்தை முதல்வர் பார்வையிட்டபோது, இவர்தான் முதல்வருக்கு விளக்கம் அளித்தவர்.
பா.ஜ.க, மற்றும் காங்கிரஸ், மேலிட பேச்சுகள், கூட்டணி என, பல்வேறு விவகாரங்களுக்கும், சபரீசன் தலைமையிலான குழுவே, டெல்லி வந்து சென்றதாக தகவல்கள் வெளிவந்தன. இப்போது, முதல்வரின் டெல்லி பயணத்தில், தி.மு.க., மூத்த தலைவர்கள் பலரும் முக்கியத்துவம் பெறாமல் தவிர்க்கப்பட்டதன் பின்னணியிலும், சபரீசன் தான் இருக்கிறார் என்கிறார்கள்.