விவசாயிகள் இல்லைன்னா நாங்க இல்லை…. போராட்டத்தில் குதித்து நெகிழ வைத்த வணிகர் சங்கங்கள்….
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வணிகர்கள் இந்னு கடைகளை அடைத்து விவசாய பெருங்குடி மக்களுக்கு பெரும் ஆதரவை அளித்து வருகின்றனர்
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்ட உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளது. எனவே, தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு வரும் 9-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தமிழகத்தில் போராட்டம் வலுத்துள்ளது. அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அறிவித்திருந்தார். அதன்படி இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் இல்லை என்றால் இந்த வணிகர்கள் இல்லை என்று கூறும் வணிகர்கள் இன்று ஒருநாள் கமைகளை அடைத்து ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. உதகை கொடைக்கானல், கன்னியாகுமரி போன்ற சுற்றுலாத் தளங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதே போல் உயிர்காக்கும் மருந்துக் கடைகளும் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று கடைகளை அடைத்துள்ளனர்.
வணிகர் சங்க பேரமைப்பின் முழு அடைப்பு போராட்டத்திற்கு பால் முகவர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.