பிரிந்து இருப்பது நல்லதல்ல... சசிகலா குறித்து ஓ.பி.எஸ் கவலை..!
எம்.ஜி.ஆர்., சக்திகளும், ஜெயலலிதா சக்திகளும் பிரிந்திருப்பது நல்லதல்ல என சசிகலா குறித்து துணை முதல்வர் ஓ.பி.எஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர்., சக்திகளும், ஜெயலலிதா சக்திகளும் பிரிந்திருப்பது நல்லதல்ல என சசிகலா குறித்து துணை முதல்வர் ஓ.பி.எஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், ‘’தனிப்பட்ட முறையில், எனக்கு யாரும் விரோதி கிடையாது. தங்கதமிழ்செல்வனின் கடந்தகால வரலாற்றை எடுத்து பார்த்தால், நானும் அவரும் நண்பர்கள் தான். எங்களுக்குள் எந்த வேறுபாடும் இருந்ததில்லை. என்னை பொறுத்தவரையில், அவர் மாவட்ட செயலராக இருந்த போது, நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தேன். அப்போது, முழு ஆதரவை அளித்திருக்கிறேன்.இன்றைக்கு, அ.தி.மு.க.,விலிருந்து விலகி, டி.டி.வி.தினகரனை தனியாக கட்சி துவங்கக்கூறி, அவரும் கட்சி துவங்கி, அவரை கொண்டு போய் நடுத்தெருவில் விட்டு விட்டு, இவர் போய் தி.மு.க.,வில் சேர்ந்து விட்டார். இதுதான், தங்கதமிழ்செல்வனின் குணாதிசயங்களில், மிகச்சிறந்த துரோக செயலாக அமைந்திருக்கிறது.
நான் வெளிப்படையான ஆள். இதுவரைக்கும், யாருக்கும் எந்த துரோகமும் செய்ததில்லை. விட்டு கொடுத்து தான் இருந்திருக்கிறேன். என் வாழ்நாளிலும் சரி, அரசியலிலும் சரி, பொதுவாழ்க்கையிலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, விட்டு கொடுத்து தான் இருந்திருக்கிறேன். விட்டு கொடுப்பவர்கள் கெட்டு போவதில்லை என்ற, தாரக மந்திரத்தை, ஏற்றுக் கொண்டவன் நான். உள்குத்து வேலை எல்லாம் செய்ய மாட்டேன். பொதுவாக என்னை பொறுத்தவரையில், எம்.ஜி.ஆர்., சக்திகளும், ஜெயலலிதா சக்திகளும் பிரிந்திருப்பது நல்லதல்ல என நினைக்கிறேன்.
நாங்கள் எல்லாம், இந்த இயக்கத்தை துவக்க காலம் முதல் உருவாக்கி, எதையும் எதிர்பாராமல் பதவி வரும் என எதிர்பாராமல் உழைத்தவர்கள். தொண்டர்கள் இயக்கமாக அ.தி.மு.க., உள்ளது. இந்த தொண்டர்கள் பிரிந்திருப்பதால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் உருவான, அ.தி.மு.க.,விற்கு எந்த பின்னடைவும் வந்து விடக்கூடாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தலைவர்களாக ஏற்றுக்கொண்ட அனைவருமே, ஒரு குடையின் கீழ் இருக்க வேண்டும் என்பது தான் என் அபிப்ராயம். இதில், மாறுபட்ட கருத்து கிடையாது.’’எனத் தெரிவித்துள்ளார்.