கலெக்டரை மிரட்டிய வழக்கு... தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜிக்கு சிக்கல்..!
திமுக எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சியரை தகாத வார்த்தைகளால் பேசியதாக அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று நடைபெற்றது. அப்போது செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜராகி, ஆட்சியரிடம் சட்டப்பேரவை உறுப்பினர் நிதியைப் பயன்படுத்தக்கோரி செந்தில் பாலாஜி மனு அளித்தார். ஆனால், அவரை ஆய்வு கூட்டத்திற்கு அழைக்காமல் ஆட்சியர் கூட்டம் நடத்தியுள்ளார். அவர் ஆட்சியருக்கு எந்த ஒரு மிரட்டலும் விடுக்கவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதை வைத்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது ஒரு திட்டமிடப்பட்ட சதி வழக்கு என்று வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசுத் தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கக் கூடாது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.