ஜெயலலிதா பாணியில் செந்தில் பாலாஜிக்கு வாழ்த்து தெரிவித்த டிடிவி...!
செந்தில் பாலாஜி சென்றதால் வருத்தம் இல்லை, எங்கிருந்தாலும் அவர் வாழ்க என்று ஜெயலலிதா பாணியில் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி சென்றதால் வருத்தம் இல்லை, எங்கிருந்தாலும் அவர் வாழ்க என்று ஜெயலலிதா பாணியில் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் அ.தி.மு.க. அமைச்சரும், அமமுக கரூா் மாவட்டச் செயலாளருமான செந்தில் பாலாஜி இன்று ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வில் இணைந்தார். இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் செந்தில் பாலாஜியை எனக்கு 2006ம் ஆண்டில் இருந்து எனக்கு நன்றாக தெரியும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னா் அவா் அமமுகவில் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.
மேலும் கட்சி உறுப்பினா் சோ்க்கையிலும் மும்முரமாக ஈடுபட்டார். இறுதியாக நவம்பா் 14-ம் தேதி அவரை பார்த்ததாக தினகரன் கூறினார். டிசம்பர் 5-ம் தேதி அமமுக சார்பில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் கூட செந்தில்பாலாஜி பங்கேற்கவில்லை. இது தொடர்பாக அவரிடம் விசாரித்த போது தனிப்பட்ட வேலைகள் இருப்பதால் பங்கேற்க முடியவில்லை என்று தெரிவித்தார்.
பின்னர் அவர் திமுக சேருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவர் இன்று திமுகவில் இணைந்துள்ளார். தி.மு.க.வுக்கு சென்றதில் எங்களுக்கு எந்த பாதிப்பும், எந்த வருத்தமும் இல்லை என்றார். 18 எம்எல்ஏக்கள் வழக்கில் ஒருபோதும் மேல்முறையீடு செய்ய மாட்டோம் என தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆா்.கே.நகா் தோ்தலில் வெற்றி பெற்றதில் இருந்து தி.மு.க. எங்களைக் கண்டு அஞ்சுகிறது. செந்தில் பாலாஜி இணைந்ததை பெரிய விழாவாக கொண்டாடியதில் இருந்து தி.மு.க. எந்த அளவிற்கு பலமாக இருக்கிறது என்று உணர முடிகிறது என்றார். 5 மாநில தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த ஒன்று தான் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.