அத்துமீறி நுழைந்து கொலைவெறித்தாக்குதல் நடத்திய திமுக குண்டர்கள் மீதும், வேடிக்கைப் பார்த்த காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரியும், அதிகாரத்திமிரில் சனநாயக மரபுகளைக் குழிதோண்டிப் புதைத்து ஆணவத்தோடு செயல்படும் திமுகவினரின் அட்டூழியத்தைக் கண்டித்துமென அறிக்கை வெளியிட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான ஐயா எடப்பாடி பழனிச்சாமி.

திமுக குண்டர்களின் அட்டூழியத்தைக் கண்டித்து சீமானுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு குரல் கொடுத்திருப்பது திமுகவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பேசிக்கொண்டிருந்த போது திமுகவினர் பேச்சை நிறுத்தும்படி மேடையில் ஏறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, நிர்வாகிகள் மாறி மாறி நாற்காலியை தூக்கி வீசி தாக்கிக்கொண்டனர். திமுகவின் இந்த அராஜகத்திற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி சீமானுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். 

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழகத்தில் தற்போது ஒரு நூதனமான ஆட்சி தீய சக்திகளால் நடத்தப்பட்டு வருகிறது என்பதற்கு பல்வேறு சம்பவங்களை எனது அறிக்கைகளின் வாயிலாக அவ்வப்போது சுட்டிக் காட்டி வருகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு (21.12.2021), தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அப்பகுதியில் உள்ள ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள், பேச்சாளரை மேடையிலேயே கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

ஜனநாயக முறையில் நடைபெற்ற அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டத்தில், இவ்வாறு திமுக-வினர் அராஜகத்தில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்க ஒன்றாகும். தாக்குதல் நடத்திய ஆளும் கட்சியினரைத் தடுக்காமல், அங்கிருந்த காவல்துறை கைகளைக் கட்டியபடி வேடிக்கை பார்த்தது ஜனநாயகப் படுகொலையாகும். அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஜனநாயக முறையில் செயல்பட அனுமதிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பல்லாயிரக்கணக்கான போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்போதெல்லாம் நாராச நடையில் அதிமுக அரசையும், எங்களையும் விமர்சித்தவர்கள் திமுக-வினர்.

எப்போதும் கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் ஆகிய வற்றின் குத்தகைதாரர்கள் தாங்கள் தான் என்று தம்பட்டம் அடித்த ஸ்டாலின் இன்று, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன், அவரது கட்சியினர் வன்முறை வெறியாட்டத்தை நடத்தி , எதிர்க்கட்சிகள், சமூக செயல்பாட்டாளர்கள், மக்களின் நலன் விரும்பிகள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் குரல் வளையை நெறிக்கிறார்கள்.

தனக்குக் கீழுள்ள காவல் துறையை, திமுக-வினரின் ஏவல் துறையாக மாற்றி, எதிர்க்கட்சியினர் மீது, ஆளும் கட்சியினர் நடத்தும் தாக்குதலையும், ஜனநாயகப் படுகொலையையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். தற்போதுள்ள அரசில், தமிழகத்தில் உள்ள உண்மையான எதிர்க்கட்சிகள் ஜனநாயக முறையில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது கண்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர். தருமபுரி சம்பவத்தில் ஈடுபட்ட திமுக-வினர் மீதும், இந்த அராஜகத்தைத் தடுக்கத் தவறிய அங்கிருந்த காவல் துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக காவல் துறை தலைவரை வற்புறுத்துகிறேன்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது, அதிமுக ஆட்சியில், இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கில் முதலிடம் வகித்த தமிழக காவல்துறை, தற்போதுள்ள திமுக அரசில் ஆளும் கட்சியினரின் கைப்பாவையாக செயல்பட்டு வருவது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இனியாவது முதல்வர் ஸ்டாலின், சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று என்றில்லாமல், தமிழ் நாட்டில் எதிர்க்கட்சிகள், சமூக செயல்பாட்டாளர்கள், மக்களின் நலன் விரும்பிகள், சமூக ஊடகங்கள் ஆகியவை ஜனநாயக முறையில் பொதுக்கூட்டம் நடத்துவதையும், கருத்துக்கள் வெளிப்படுத்துவதையும் காவல் துறையினரை வைத்தும், தனது கட்சியினரை வைத்தும் தடுக்க நினைக்கும் போக்கை கைவிட வேண்டும். இல்லையெனில் இந்த அராஜகப் போக்கை எதிர்த்து பொதுமக்களே வீதியில் இறங்கி போராடும் நிலை உருவாகும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில், திமுக அராஜகத்தை எதிர்த்தும், நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்த எடப்பாடி பழனிசாமிக்கு சீமான் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- “தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைகோரிய ஆர்ப்பாட்டத்தில், அத்துமீறி நுழைந்து கொலைவெறித்தாக்குதல் நடத்திய திமுக குண்டர்கள் மீதும், வேடிக்கைப் பார்த்த காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரியும், அதிகாரத்திமிரில் சனநாயக மரபுகளைக் குழிதோண்டிப் புதைத்து ஆணவத்தோடு செயல்படும் திமுகவினரின் அட்டூழியத்தைக் கண்டித்துமென அறிக்கை வெளியிட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றியும், வணக்கமும்! என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

திடீரென சீமானுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி குரல் கொடுத்திருப்பதும், அதற்கு உடனே சீமான் நன்றி தெரிவித்திருப்பதும் திமுகவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.