Seeing Double leaf fear DMK - Stalin Assiut
இரட்டை இலை சின்னத்தைப் பார்த்து, திமுக என்றும் அஞ்சியதில்லை என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலாவும் ஒ.பி.எஸ்சும் எதிர் எதிராக செயல்பட தொடங்கினர். சசிகலாவுக்கு எதிராக ஒ.பி.எஸ் பல குற்றசாட்டுகளை முன்வைத்தார்.
இதையடுத்து சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். அதற்கு முன் கட்சியின் பொறுப்பை தினகரனிடமும் ஆட்சி பொறுப்பை எடப்பாடி பழனிசாமியிடமும் ஒப்படைத்துவிட்டு சென்றார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதில் யார் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது என்று இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.
அதனால் தேர்தல் ஆணையம் அதிமுகவின் ஆணி வேறாக திகழ்ந்த இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக அறிவித்தது.
இதனால் இருதரப்பும் வேறு ஒரு சின்னத்தில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இரட்டை இலையை பார்த்து திமுகவுக்கு பயமில்லை எனவும், பல தேர்தல்களில் இரட்டை இலை சின்னத்தை திமுக தோற்கடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த தேர்தலில் கூட விளவங்கோடு தொகுதியில் இரட்டை இலை சின்னம் டெபாசிட் தொகையை இழந்ததாகவும், இரட்டை இலை இருந்தாலும் இல்லை என்றாலும் எங்களுக்கு ஒன்றுதான் என கூறினார்.
