சொத்து குவிப்பு வழக்கில் ரூ.100 கோடி அபராதம், ஜெயலலிதாவின் சொத்துக்களை முடக்க உத்தரவு!
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும், குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதி மன்றம்.
ஜெயலலிதா இறந்ததால், அவர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை வசூலிப்பது குறித்து சரியான விளக்கம் இல்லை.
இந்நிலையில், கர்நாடகா அரசு சார்பில் இவ்வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை கட்டுவதற்கு, அவரது சொத்துகளை உடனடியாக முடக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக செய்துள்ள செலவுகள் அனைத்தையும் கர்நாடகா அரசுக்கு திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டிருந்தது.
அதன்படி, சென்னையில் உள்ள போயஸ் கார்டன் இல்லம், கொடநாடு எஸ்டேட் மற்றும் சிறுதாவூர் பங்களா ஆகிய ஜெயலலிதாவின் சொத்துக்களை முடக்கவேண்டும்.
அந்த பணியை மேற்கொள்ள வேண்டிய விஜிலென்ஸ் துறை சார்பில், சொத்துக்கள் இருக்கும் சென்னை, காஞ்சிபுரம், நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
பின்னர் அந்த கடிதம் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பி க்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் பதறிப்போன முதல்வர் எடப்பாடி, அந்த நோட்டீஸை எப்படியாவது வாபஸ் வாங்குங்கள் என்று கூறி இருக்கிறார்.
ஆனால், அது எழுத்துப்பூர்வமாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டதால், எதுவும் செய்ய முடியாது என்று முதல்வருக்கு சொல்லப்பட்டு இருக்கிறது.
அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்திலும், டென்ஷனிலும் இருக்கிறார் எடப்பாடி.