ஓபிஎஸ் பக்கம் சாயும் பெண் எம்பி... செங்கோட்டையனின் அரசியல் எதிரி - முழு விவரம்
உள்ளூர் அரசியல் பகையால் செங்கோட்டையனை எதிர்க்கும் சத்யபாமா எம்.பி ஓபிஎஸ்சுடன் கைகோர்க்க உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட அரசியலில் எதிரும் புதிருமானவர்கள் மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனும் புதிய வரவான சத்யபாமா எம்.பியும்.
சத்யபாமாவும் செங்கோட்டையனும் எதிரிகள் அல்ல. மாவட்ட அமைச்சர் கோட்டாவில் நீயா நானா என கடந்த ஆட்சியில் போட்டி போட்டு கொண்டிருந்த பெருந்துறை எம்எல்ஏவான தோப்பு என்.டி.வெங்கடாசலத்துக்கும் கோபிசெட்டிபாளையம் கே.ஏ.செங்கோட்டயனுக்கும் இடையே உள்ள அரசியல் போரில் வெங்கடாசலத்துடன் இணைந்ததால் செங்கோட்டயனுக்கு எதிரியாகிப் போனார் சத்யபாமா.
மேலும் சத்யபாமாவின் கணவர் வாசுதேவனை செங்கோட்டையன் தூண்டி விட்டு தனக்கெதிராக பேசவைக்கிறார் என ஆழமாக நம்புகிறார் சத்யபாமா.
கோபி தொகுதியில் பழுத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் அப்பகுதி அதிமுக நிர்வாகிகளை தனது கட்டுபாட்டில் வைத்திருக்க நினைத்தார்.
ஆனால் அதற்கு ஒட்டுமொத்தமாக ஆப்பு வைத்து விட்டார் அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாசலம்
கோபி நகர செயலாளர் மற்றும் நகர மன்ற தலைவராக இருந்த செய்யது புடான்சா செங்கோட்டையனுக்கு எதிராக அரசியல் செய்தார். அவருடன் மிகவும் நெருக்கமானவர்தான் இந்த சத்யபாமா.
கடந்த ஆட்சியில் 5 ஆண்டுகளாகவே சத்யபாமாவும் செய்யது புடான்சாவும் அமைச்சர் தோப்ப வெங்கடாசலத்துடன் சேர்ந்து செங்கோட்டையனுக்கு பெரும் குடைச்சல் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கோட்டையனுக்கு அதிமுக தலைமையிடமிருந்து அடித்தது ஜாக்பாட்.
ஒதுக்கி வைக்கபட்டிருந்த செங்கோட்டையன் மீண்டு லைம் லைட்டுக்கு வந்ததால் இனி அரசியல் எதிர்காலம் கிடையாது என்பதை புரிந்து கொண்டார் சத்யபாமா.
அதனால் எந்த நேரமும் ஓபிஎஸ்சிடம் சரணடைய அவர் காத்திருக்கிறாராம்.
குறிப்பு : சத்யபாமா ஓபிஎஸ்சிடம் வருவதற்கு தற்போது இடைக்கால தடை போட்டிருப்பவர் அவரது அரசியல் குருவான தோப்பு வெங்கடாசலம்.
பொறுத்திருந்து பார்க்கலாம் என்று அவர் கூறியதால் சற்று தாமதம் செய்கிறாராம்.