sasikala wants to learn english in prison

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவுக்கு திடீரென ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் ஆசை வந்துவிட்டது.

தனக்கு பிரத்யேகமான ஆசிரியரை நியமிக்கக் கோரி சிறை அதிகாரிகளிடம் சசிகலா மனுஅளித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டவர்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கி பெங்களூரு பரப்பன அக்ஹார நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதே தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து, கடந்த மார்ச் 4-ந்தேதி சசிகலா,இளவரசி, சுதாகரன் ஆகியோர் பரப்பன அக்ரஹாரசிறையில் அடைக்கப்பட்டனர்.

இருப்பினும், அவ்வப்போது கட்சி நிர்வாகிகள், அவரைச் சந்திப்பதும்,ஆலோசனை நடத்துவதும் தொடர்ந்து நடந்து வருகின்றன. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அடிக்கடி சந்தித்து கட்சிசார்பான விஷயகங்களில் ஆலோசனைகளை பெற்றுவந்தார்.

ஆனால், ஜெயலலிதாபோல், பன்முக மொழித்திறமைகளை சசிகலா பெற்று இருக்கவில்லை. ஆதலால், சிறையில் தமிழ் நாளேடுகளை மட்டுேம வாங்கி சசிகலா படித்து வருகிறார்.

ஆங்கில அறிவும், மொழிப்புலமையும் அவருக்கு இல்லாதது பல நேரங்களில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

இதையடுத்து, சிறையில் இருக்கும் நாட்களை பயனுள்ளதாக ஆக்கும் வகையில், ஆங்கிலம் கற்க சசிகலா முடிவு செய்துள்ளார்.

இதற்காக தனக்கு தனியாக ஒரு ஆசிரியரை நியமனம் செய்யும்படி, சிறை அதிகாரிகளுக்கு தனிப்பட்ட முறையில் சசிகலா மனு அளித்துள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், சசிகலாவின் உறவினர் இளவரசிக்கும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், அந்த கோரிக்கையை மறுத்த அதிகாரிகள், இளவரசியின் உடலில் இருந்து ரத்தமாதிரிகளை சேகரித்து, விக்டோரியா எனும் தனியார் மருத்துவமனை ஆய்வுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த ஆய்வறிக்கையின் முடிவுகளைப் பொருத்து, இளவரசியை வெளிமருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிப்பதுகுறித்து முடிவு செய்வோம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.