சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட அதிமுக விதிகள் திருத்தப்படும் என்று பொன்னையன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வி தமிழக பொது மக்களிடையே இருந்து வருகிறது. ஓபிஎஸ் உள்ளிட்ட கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் ஒட்டு மொத்தமாக ஜெவின் தோழி சசிகலாவே அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் என கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் உள்ள ஜெவின் சமாதியில் அஞ்சலி செலுத்திய அ.தி.மு.க..வின் செய்தித் தொடர்பாளர் திரு.பொன்னையன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிவித்தார்.

ஜெவுடன் சிறையில் இருந்தவர் சசிகலா என்றும்,குடும்பப் பாசத்தைத் துறந்து,அம்மாவின் நிழல் போல இருந்தவர், ஜெவுக்கு தொடர்ந்து உதவிகள் செய்த தியாக செம்மல் என்று சசிகலாவை வெகுவாக புகழ்ந்த பொன்னையன், அவரை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுப்பதற்கு அ.தி.மு.க.வின் விதிகள் தளர்த்தப்படும் என தெரிவித்தார்.

சசிகலாவை முதன்முதலில் சின்னம்மா என்று அழைத்தவர்..கழக நிர்வாகிகள் அவரை சென்று சந்திப்பதில் என்ன தவறு என்று முதலில் கேட்டவர் பொன்னையன். எனவே மேலிடம் நினைக்கும் அல்லது எடுக்கும் முடிவுகள் பொன்னையன் மூலம் அறிவிக்கப்படுகிறது என்றே அ.தி.மு.க.வினர் நினைக்கிறார்கள்.