"சசிகலாவின் பஞ்சதந்திரத்திற்கு ஐந்து நாள் போதும்"! தெறிக்கவிடும் சசி கோஷ்டியினர்...
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டணை பெற்றுள்ள சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் நடராஜன் தற்போது உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து சசிகலா 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் 5 நாட்கள் மட்டும் பரோல் கொடுத்துள்ளது கர்நாடகா சிறைத்துறை.
சசிகலாவுக்கு பரோல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நேற்று மாலை தினகரன் பெங்களூரு புறப்பட்டு சென்றார். இதைத்தொடர்ந்து இரவு சுமார் 10 மணியளவில் சசிகலாவுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் பரோல் கிடைத்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் புகழேந்தி இதனை மறுத்தார். நேற்று கர்நாடகாவில் வால்மீகி ஜெயந்தி விடுமுறை என்பதால் இன்றுதான் அவருக்கு பரோல் கிடைத்துவிட்டது.
பரோலில் வெளிவரும் சசிகலா, சென்னையில் தங்க உள்ள இளவரசிக்கு சொந்தமான அபிபுல்லா ரோடு பங்களாவில் தங்கவிருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது.
இதனையடுத்து சசிகலாவின் வருகையை ஒட்டி அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் சசிகலா ஆதரவாளர்கள் கூறுகையில், "சசிகலாவுக்கு பரோல் கிடைத்தது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அவரை வரவேற்கத் தயார்நிலையில் இருக்கிறோம். ஏழு மாதங்களுக்குப் பிறகு சசிகலா, சிறையிலிருந்து வெளியில்வருகிறார். அவருக்கு வழங்கப்பட்ட பரோல் அனுமதியில் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக நடராஜனை மட்டும் சசிகலா சந்திக்கலாம். அதைத்தவிர, மற்ற யாரையும் அவர் சந்திக்க வேண்டும் என்றால் சிறைத்துறையின் அனுமதி பெற வேண்டும். குறிப்பாக உறவினர்களைக்கூட சசிகலா சந்திக்க வேண்டும் என்றால் அவருடன் வரும் காவலர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது எனவும். மீடியாக்களுக்குப் பேட்டி அளிக்கக் கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இது பரோலில் வரும் எல்லோருக்கும் பொதுவானதுதான்" என்றனர்.
மற்றொரு ஆதரவாளர் கூறுகையில், சசிகலா பரோலில் வெளிவருவதை அடுத்து தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு அமைச்சர் தங்கமணி டெல்லிக்கு சென்றுவிட்டார். சசிகலா விடுதலையானால் இந்த அமைச்சர்களெல்லாம் ஆசியா கண்டத்துலயே இருக்கமாட்டாங்க, என்றார்.
மற்றொரு தொண்டர் கூறுகையில்; சசிகலா ஐந்து நாள் பரோலில் வருகிறார்.சின்னம்மா சசிகலாவின் பஞ்சதந்திரதிற்கு ஐந்து நாள் போதும் தமிழக அரசயலில் ஒரு மாற்றத்தை கொண்டுவர என பொடிவைத்து கூறியுள்ளார்.
"சசிகலாவுக்கு 5 நாள் பரோலுக்கு அனுமதிக்கப்பட்டதையடுத்து அரசியல், மீடியாக்கள் போன்ற நடவடிக்கைகளில் பரோலில் வருபவர்கள் ஈடுபடக் கூடாது போன்ற சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அப்படி நிபந்தனைகளை மீறினால் பரோல் ரத்து செய்யப்படும்" என கூறப்பட்டுள்ளநிலையில் சசிகலாவின் ஆதரவாளர்களோ தமிழக அரசியலில் பெரிய மாற்றம் நிகழும் என மார்தட்டி சொல்வது எந்தவிதத்தில் சாத்தியம் என தெரியவில்லை.