கருணாநிதிக்கு பேனா சின்னம் தேவையா.? தேவையில்லையா.? சசிகலா சொன்ன ப்ளாஸ்பேக்
கடலுக்குள் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் வைக்கக்கூடாது என்று சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தை சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்கான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பேனா நினைவுச் சின்னம் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். அரங்கில் சீமான் பேசும்போது கூச்சல் எழுப்பப்பட்டது. இருப்பினும், கடலுக்குள் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.
இதையும் படிங்க..இனி இதுதான் ஆந்திராவின் தலைநகரம்.. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது குவியும் புகார்கள் - பின்னணி என்ன?
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சீமான்,மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற பெயரில் கூட்டத்தை நடத்தி, அவர்களுக்கு ஆதரவான கருத்துகளை ஏற்பது, எதிர்க் கருத்து தெரிவித்தால், அதனை எதிர்த்து கூச்சலிடுவது என்பது ரொம்ப அநாகரிகம். அதற்கு எதற்காக கருத்துக் கேட்புக் கூட்டம், கட்சிக் கூட்டம் என்ற பெயரில் நடத்திவிட்டுப் போகலாம். எனவே, முதலில் அந்தச் செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
ஐயா கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் வைப்பதை எதிர்க்கவில்லை, ஏற்கிறோம். ஆனால், கடலுக்குள் வைக்கக் கூடாது. அவ்வாறு வைப்பதை வன்மையாக நாங்கள் கண்டிக்கிறோம், எதிர்க்கிறோம். அதுதான் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு. அது சுற்றுச்சூழலுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும். 360 மீட்டர் கடலுக்குள் சென்று, 8551.13 சதுரமீட்டர் பரப்பை இதற்காக எடுக்கவுள்ளனர்.
கிட்டத்தட்ட அரை ஏக்கர் கடலில் எடுக்கின்றனர். கடலுக்குள் கல், மண்ணைக் கொட்டி அதன்மேல் அந்தப் பேனாவை நிறுவ வேண்டும். அதைப் பார்வையிட செல்லும் மக்கள் நெகிழி உள்ளிட்டவற்றை தூக்கி எறிந்துச் செல்வர்.பள்ளிக் கூடங்களை புனரைமைக்க நிதி இல்லை எனக் கூறி நிதி திரட்டும் அரசுக்கு, இந்தப் பேனா வைக்க மட்டும் ரூ.81 கோடி எங்கிருந்து வருகிறது? வள்ளுவருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது என்றால், அங்கு ஏற்கெனவே பாறை இருந்தது என்று கூறினார் சீமான்.
இந்த நிலையில் இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைமையிலான அரசு முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி அவர்களுக்காக சென்னை மெரினாவில் கடலின் நடுவே 137அடி உயர பேனா வடிவில் நினைவு சின்னம் அமைப்பதற்காக கருத்துகேட்பு கூட்டம் ஒன்றை நடத்திக்கொண்டு இருக்கிறது. இதில் கலந்து கொண்டவர்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தெளிவாக எடுத்துரைத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் நியாயமான கருத்துக்களை பேசிவருகிறார்கள்.
இதையும் படிங்க..டேய் எப்புட்றா.. நாம் தமிழர் கட்சியில் இணைய திருமகன் ஈவெரா என்னை சந்தித்தார் - சீமான் பரபரப்பு பேச்சு
ஆனால் திமுகவினரோ அவர்களின் கருத்துக்களைக் கூட சொல்ல முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படுத்தி யாரையும் பேச விடாமல் துரத்தி அடிப்பது எந்தவிதத்தில் நியாயம்? தற்போது நடந்து கொண்டு இருப்பது கருத்துகேட்பு கூட்டமா? அல்லது கட்டப்பஞ்சாயத்தா? என்கிற அளவுக்கு எண்ணத் தோன்றுகிறது. இந்த திட்டத்தை எதற்காக அனைவரும் எதிர்க்கிறார்கள் என்பதை திமுகவினர் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
கடலில் கட்டுமானங்களை ஏற்படுத்துவதால் சுற்றுப் புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு,கடல் வாழ் உயிரினங்களுக்கும் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கக்கூடிய நிலைமை ஏற்படும். மேலும், இன்றைய கடும் நிதி நெருக்கடியில், இந்த திட்டத்திற்காக பொதுமக்களின் வரிப்பணத்தை செலவழிப்பது உகந்ததா? என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும். யாராலும் இதனை ஒரு அறிவார்ந்த செயலாக பார்க்கமாட்டார்கள்.
மேலும், சென்னை போன்ற பெருநகரங்களில் கடலின் நடுவே இதுபோன்ற கட்டுமானங்களை ஏற்படுத்தும்போது, இது சமூகவிரோதிகளின் புகலிடமாக அமைந்துவிட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இதில் சமூக விரோத செயல்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்கு மிகுந்த விழிப்புடன் பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்படும், ஏற்கனவே பல்வேறு பணிசுமைகளை தாங்கிக்கொண்டு இருக்கும் காவல் துறையினருக்கு இது கூடுதல் சுமைகளை ஏற்படுத்திவிடும் என்பதையும் இந்த ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
திமுக ஆட்சியாளர்கள் இது போன்று யாருக்கும் பலனளிக்காத பேனா நினைவு சின்னம் அமைக்கும் திட்டத்திற்காக நேரத்தை செலவழிப்பதை விட்டுவிட்டு, தமிழக மக்களுக்கு பயனளிக்கின்ற உருப்படியான திட்டங்களை செயல்படுத்த முன் வர வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க..Annamalai: பாஜக நிர்வாகிகள் 5 பேர் அதிரடி நீக்கம்.. சாட்டையை சுழற்றிய அண்ணாமலை - அதிர்ச்சியில் பாஜக வட்டாரம்