sasikala pushpa talks about admk joining
அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணைவதற்கான சாத்தியம் இல்லை. அ.தி.மு.க உடைந்தது உடைந்ததுதான் என்று எம்.பி. சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.
எம்.பி. சசிகலா புஷ்பா, மறைந்த ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாடாளுமன்றத்தில் பரபரப்பு கருத்தை தெரிவித்தார்.
இதனை அடுத்து, சசிகலா புஷ்பா, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, எம்.பி. சசிகலா புஷ்பா மீது, பணமோசடி, பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் தொடரப்பட்டன.
நெல்லை, திசையன்விளை அருகே ஆனைக்குடி கிராமத்தில் உள்ள சசிகலா புஷ்பா வீட்டில் வேலை பார்த்து வந்த ஜான்சிராணி, பானுமதி என்ற இளம் பெண்கள், நெல்லை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கில், ஜாமின்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டார். இதையடுத்து, அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த புகார் தொடர்பான வழக்கு நாங்குநேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிமன்றத்தில் இன்று ஆஜரான சசிகலா புஷ்பா, ஜாமீன் உத்தரவு ஆவணங்களைத் தாக்கல் செய்தார்.
பின்னர் நீதிமன்றத்தைவிட்டு வெளியே வந்த சசிகலா புஷ்பா, செய்தியாளர்கள் சந்தித்துப் பேசினார். மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் சாமான்ய மற்றும் நடுத்தர மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்றார்.
அவர்களைப் பாதிக்கும் வகையிலேயே இந்த வரிவிதிப்பு உள்ளது. இந்த வரி விதிப்பால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என்று கூறினார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நிகராக யாராலும் ஆட்சி செய்ய முடியாது. அவர் ஏழை - எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மனதில் கொண்டு சிறப்பான வகையில் ஆட்சி புரிந்தார்.
அவரது ஆட்சியுடன் தற்போதைய ஆட்சியை ஒப்பிட்டுப் பேசவே கூடாது. அவரைப்போன்ற தலைமைப் பண்பு கட்சியில் யாருக்குமே இருக்கவில்லை. அதனால்தான் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு விட்டது.
இரு அணியினருக்கும் இடையே யார் பெரியவர் என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது. அதனால், ஓ.பன்னீர்செல்வம் தனது அணி சார்பாக பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழுவை கலைத்து விட்டார்.
இது தரப்பினருக்கும் இடையே ஏற்பட்டு இருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக மீண்டும் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை. அதிமுக உடைந்தது உடைந்ததுதான் என்று சசிகலா புஷ்பா தெரவித்தார்.
