அசுர வேகம் எடுக்கும் சசிகலா அரசியல் பிரவேசம்... இரண்டு தொகுதிகளுக்கு குறி..!
சசிகலா உசிலம்பட்டி, அல்லது கோவில்பட்டி ஆகிய இரு தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
சசிகலாவின் அரசியல் பிரவேசம் இன்னும் சில நாட்களில் அசுர வேகம் எடுக்கும். எதிரிகளின் நெஞ்சம் பதறும்படி விசுவரூபம் எடுப்பார் என்று நமது எம்.ஜி.ஆர் நாளேட்டில் செய்தி வெளியாகியிருக்கிறது. ‘அவதூறுகளுக்கு இனி துளியும் இடமில்லை’என்ற கட்டுரையில் இந்த தகவலானது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் “துரோகிகள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்; நினைவு படுத்திக்கொள்ள வேண்டும். கழகம் வலிமையோடும் பொலிவோடும் இருக்கவேண்டும் என்ற நல்லெண்ணம் கெண்டோர் சத்திய அரசியலில்தான் ஈடுபடுவார்கள்; சந்தர்ப்பவாத அரசியலில் அல்ல, சூதும்-சூழ்ச்சியும் கவ்வியுள்ள அரசியலில் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள்.” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “சுயலாபத்திற்காக, இயக்கம் சிதறுண்டு போவதை சசிகலா ஒருகாலும் ஏற்க மாட்டார்”என்றும், “தொண்டர்களை காத்திட, எந்த தொல்லையையும் எதிர்த்து எதிர் நீச்சல்போட துணிவான முடிவோடு தீவிர அரசியலில் ஈடுபட திடமான உறுதியான முடிவை எடுத்துவிட்டார்”எனவும் உறுதியாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் சசிகலா உசிலம்பட்டி, அல்லது கோவில்பட்டி ஆகிய இரு தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.