செல்வி ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அவர் வகித்து வந்த பொது செயலாளர் பதவி யாருக்கு என் மிகப்பெரிய கேள்வி எழுந்து வந்தது. அவரது தோழி சசிகலா அந்த பதவியை ஏற்பார் என்றும், காலியாக உள்ள ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் பரவின.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த நிலையில் சசிகலா, நேற்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் குடும்ப உறுப்பினர்கள் சிலருடனும் பலமணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைகளுக்கு பிறகு, செல்வி ஜெயலலிதா வகித்து வந்த பொது செயலாளர் பதவி தனக்கு வேண்டாம் என்றும், எப்போதும் அக்காவே நிரந்தர பொது செயலாளராக இருக்க வேண்டும் என்றும் சசிகலா கூறியதாக தெரிகிறது. பின்னர் கட்சியை வழிநட்ததுவதற்காக தலைவர் பதவியை ஏற்று கொள்ள சம்மதித்ததாக தெரிகிறது.

இதற்கு ஓபிஎஸ், எடப்பாடி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் ஆமோதித்ததாக தெரிகிறது. அடுத்த வாரத்தில் ஒருநாள் செயற்குழு, பொதுக்குழு கூடி, அதிமுக தலைவர் என்ற புதிய பொறுப்பை உருவாக்குவதுடன், புதிய தலைவராக வி.கே.சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.