வருமான வரித்துறையின் விசாரணையில் இருந்து எஸ்கேப் ஆவாரா சசிகலா ? சிறையில் வக்கீல்களுடன் அவசர ஆலோசனை !!!
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களுரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலாவிடம் தமிழகத்தில் அவரது உறவினர்களிடம் நடைபெற்ற வருமான வரி சோதனை குறித்து சிறையில் வழக்கறிஞர்களுடன் சசிகலா தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
ஜெயா தெலைக்காட்சி, நமது எம்ஜிஆர் பத்திரிக்கை அலுவலகம், சசிகலாவின் உறவினர்களான விவேக், கிருஷ்ண ப்ரியா, திவாகரன் உள்ளிட்டோருக்கு சொந்தமான 187 இடங்களில் கடந்த 9 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு 188 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த ரெய்டில் ஏராளமான முக்கிய ஆவணங்கள், தங்க, வைர நகைகள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விவேக், அவரது சகோதரிகள் கிருஷ்ணப்பிரியா, ஷகிலா, பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடமும் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் தன்னுடைய உறவினர் வீடுகளில் நடைபெற்ற சோதனை, அது தொடர்பான செய்திகளை பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் மூலமாக மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அறையை விட்டு வெளியே வராமல் இந்த செய்திகளிலே மூழ்கி இருப்பதகாவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சசிகலாவின் வழக்கறிஞர் அசோகனுடன் அவர்ந ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. 2 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, வருமான வரி சோதனை தொடர்பாக சசிகலா சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். மேலும் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிவிவி தினகரன், ஜெயா டிவியின் தலைமை செயல் அதிகாரி விவேக் ஆகியோருக்கு தனித்தனியாக இரு கடிதங்களை கொடுத்து அனுப்பியதாக தெரிகிறது.
இதேபோல பெங்களூருவில் உள்ள வழக்கறிஞர்கள் மூர்த்தி ராவ், கிருஷ்ணப்பன் ஆகியோரும் சசிகலாவை சந்தித்துப் பேசியுள்ளனர்.