முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். இதையடுத்து அதிமுகவில் பொது செயலாளர் பதவி காலியாக உள்ளது. இந்த பதவியில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாக தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இச்சம்பவம், அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களில் சிலரும் இதற்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். தொண்டர்கள் பலர், வி.கே.சசிகலா, அதிமுக பொது செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அரசியல் நோக்கர்களும் பல்வேறு கருத்துகளை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மதிமுக பொது செயலாளர் வைகோ, தனது அரசியல் மற்றும் நட்பு வட்டாரங்களில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக பொது செயலாளராக பதவி வகிப்பதே சிறந்தது என கூறியுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வருகின்றனர். இந்த செய்திகளில் கூறியிருப்பதாவது.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் துவங்கிய அதிமுகவில், ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு, பல மடங்கு உயர இடத்துக்கு கொண்டு சென்றுவிட்டார். எம்ஜிஆர் இருக்கும்போது தமிழக மக்களின் ஆதரவும், கட்சியினரின் ஆதரவும் இருந்தது. கட்சியை ஜெயலலிதா வழி நடத்த தொடங்கியதும், அனைத்து கட்சியில் உள்ளவர்களும் அதிமுகவில் இணைந்துவிட்டனர்.

அதிமுகவை துவங்கிய எம்ஜிஆரின் சாதனைகளைவிட, ஜெயலலிதாவின் சாதனைகள் மக்களிடம் பரவலாக பேசப்பட்டது. அனைத்து நலத்திட்டங்களும் மக்களுக்கு சென்றடைந்தது. அதே வேளையில் ஜெயலலிதா பல சோதனைகளையும் தாண்டினார். மன உளைச்சல் அடைந்துள்ளார்.

அந்த நேரத்தில் ஜெயலலிதாவுட்ன் இன்பத்திலும், துன்பத்திலும் தோள் கொடுத்து உறுதுணையாக இருந்தவர் சசிகலா. 30 ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் இருந்த அவருக்கு அரசியல் நாகரிகம், சிறந்த நிர்வாக திறமை அனைத்தும் உள்ளது. எனவே, அதிமுகவை வழி நடத்தவும், கட்டிக் காப்பாற்றவும் சசிகலாவால் மட்டுமே முடியும் என வைகோ கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வருவதால், அரசியல் கட்சிகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.