"சசிகலா முதலில் எனக்குச் சித்தி" - பெங்களூரு பயணத்திற்கு காரணம் சொன்ன டிடிவி
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவை உறவினர் என்ற முறையில் சந்திக்கச் செல்வதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலைக்காக லஞ்சம் அளித்த புகாரின் பேரில் டிடிவி தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கடும் குழப்பத்தில் இருக்கும் டிடிவி,
சசிகலாவை சந்திப்பதற்காக இன்று பெங்களூரு செல்கிறார். அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது குறித்து சசிகலாவிடம் அவர் விரிவாக ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், உறவினர் என்ற முறையில் சசிகலாவை சந்திப்பதற்காக தாம் பெங்களூரு செல்ல இருப்பதாகக் கூறினார்.
அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் அவர் தன்னிடம் எதாவது கூறினால், அவர் வழங்கும் ஆலோசனைகளை கேட்பேன் என்று குறிப்பிட்ட அவர், தன் மீதான வழக்கு பதிவுக்கும் பெங்களூரு பயணத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.