நிழல் அரசியல் நடத்தியவர் சசிகலா; ஒப்புக்கொண்ட பொன்னையன்!
உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதாவுக்கு எய்ம்ஸ் டாக்டர்கள், லண்டன் டாக்டர் உள்ளிட்ட பலர் சிகிச்சை அளித்து வந்தனர்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்தபோது, மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், செய்தியாளர்களிடம் பேசும்போது, ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்றும், ஆரோக்கியமாக உள்ளார் என்றும் அவர் கூறி வந்தனர். அப்படி கூறியவர்களில்
பொன்னையனும் ஒருவர்.
இந்த நிலையில், பொன்னையன், வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், சசிகலா குறித்து பல பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார்.
அதில் முக்கியமாக, அதிமுகவில் நிழல் அரசியல் நடத்தியவர் சசிகலா என்று கூறியுள்ளார். அதிமுகவில் சசிகலாதான் எல்லாம் என்கிற நிலை ஏற்பட காரணம் என்ன? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஜெயலலிதா 5 வயது குழந்தையின் உள்ளம் கொண்டவர். தனக்கு உதவியாளராக சசிகலாவை வைத்திருந்தார்.
சசிகலா புத்திசாலி, திறமைசாலி என்பதைவிட தந்திரசாலியாக இருந்தார். எப்படியோ ஜெயலலிதாவை ஏமாற்றி, படிப்படியாக கட்சியில் ஆதிக்கம் செலுத்தி, கட்சியை கையிலெடுத்துக் கொண்டார்.
ஒரு கட்டத்தில் பிராக்ஸி கவர்மென்ட் என்ற முறையில் ஆட்சியை மறைமுகமாக சசிகலா நடத்தினார். சசிகலா யாரை நினைக்கிறாரோ அவர்தான் எம்எல்ஏ; யாரைக் கைகாட்டுகிறாரோ அவர்கள்தான் அமைச்சர்கள். தங்களுக்கு வேண்டிய செட்-அப்பை ஆட்சி எந்திரத்திலும் சசிகலா கொண்டு வந்தார் என்று பொன்னையன் அந்த பத்திரிகையில் கூறியுள்ளார்.