sasikala didnt participate in mahadevan mourning

மகாதேவன் மரணத்தில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டதால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான சசிகலாவுக்கு, ரத்த அழுத்தமும், சர்க்கரை அளவும் அதிகாகி உள்ளது. இதனால் சிறை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். 

சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன், நேற்று முன்தினம் மாரடைப்பால் உயிரிழந்தார். மகாதேவன் இறந்த செய்தியை கேட்டு கடும் உளைச்சலுக்கு ஆளானார் சசிகலா.

அதன் பிறகு, மகாதேவன் மரணத்தில் கலந்து கொள்ள அவர் அனுமதி கேட்க திட்டமிட்டு இருந்தார். ஆனால், அவருடன் சிறையில் இருந்த இளவரசி, அங்கு போகவேண்டாம் என்று கூறி உள்ளார்.

அனுமதி கேட்டால், சிறை அதிகாரிகள் ஒரு நாள் மட்டுமே அனுமதி கொடுப்பார்கள். அதுவும் போலீஸ் வாகனத்தில்தான் செல்ல முடியும். கடுமையான வெயிலில், ஏசி இல்லாத போலீஸ் வாகனத்தில் பயணம் செய்தால் உடலுக்கு ஒத்துவராது.

தமிழக போலீஸ் காவலுக்கு வந்தால், அவர்களுக்கு நம் நிலைமை புரியும். கர்நாடகா போலீசிடம் நாம் அதை எல்லாம் எதிர்பார்க்க முடியாது.

மேலும் போலீஸ் காவலுடன் ஊருக்கு சென்றால், அங்கு இருப்பவர்கள் நம்மை ஒருமாதிரியாக பார்ப்பார்கள். அது நமக்கு அவமானமாக இருக்கும் என்று இளவரசி கூறி இருக்கிறார்.

அதன் பிறகே, மகாதேவன் மரணத்திற்காக விடுப்பு கேட்கும் முடிவை சசிகலா கை விட்டார் என்று கூறப்படுகிறது.

எனினும் மகாதேவன் மரணத்தில் பங்கேற்க முடியாத சூழல், சசிகலாவுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி, ரத்த அழுத்தத்தையும், சர்க்கரையின் அளவையும் கூட்டிவிட்டது.

இதனால், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.