பன்னீருக்கு ஒன்பதில் குரு-சசிகலாவுக்கு அஷ்டமத்தில் சனி: கால ஓட்டத்தில் எல்லாமே உள்ளே-வெளியே ஆட்டம்தான்!
2011 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில்தான், பெரியகுளம் தொகுதியில், முதன்முதலில் பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ ஆகி, அமைச்சர் ஆகி, சில மாதங்கள் முதல்வராகவும் இருந்தார்.
அந்த தேர்தலில், அவரை திமுக சார்பில் எதிர்த்து நின்றவர், அவருக்கு வீடு வாங்கி கொடுத்த நண்பரான அபுதாகீர். அவர் நண்பர் மட்டும் அல்ல, வளைகுடா தொடர்புகள் நிறைந்தவர்.
அதனால், வளைகுடா நாடுகளில் முதலீடு செய்ய வசதியாக இருக்கும் என்று எண்ணி, அபுதாகீரை, அதிமுகவில் சேர்த்து கூடவே வைத்துக் கொண்டார் பன்னீர்செல்வம்.
அதன்படி, வளைகுடா நாடுகளில் அபுதாகிரை வைத்துத்தான் பன்னீர்செல்வம் முதலீடுகளைச் செய்தார். அங்கு பல சொத்துக்களை வாங்கிப்போட்டார்.
அதேநேரத்தில், மணல் ராஜா, பாலமுருகன், பத்திர எழுத்தர் நாகராஜ் என்ற கூட்டம் ஒன்றும் பன்னீருடன் கூட்டணி அமைத்தது.
தேனி மாவட்டத்தில் எங்கெல்லாம் சொத்துக்கள் வாங்கலாம்... அவற்றை யார் பெயரில் வாங்கலாம்... என்பதற்கு யோசனை சொல்லும் ஆள், அம்பு, படை, பட்டாளமாக அந்த கூட்டணி செயல்பட்டது.
அவர்களின் வழிகாட்டுதலில், போடி முந்தல் எரியாவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் தோப்புகள், பெரியகுளம் கைலாசபட்டி கோயில் காடுகளில் பல சொத்துக்கள் வாங்கப்பட்டன.
சோத்துப்பாறை, கும்பக்கரை, உப்புக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் ஏலக்காய், காபித் தோட்டங்கள் வாங்கப்பட்டன. பெங்களூரிலும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வாங்கப்பட்டது.
சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் நத்தம் விஸ்வநாதன் மகன் அமர், ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் சேர்ந்து பெரிய அளவில் தொழில் சாம்ராஜ்ஜியம் தொடங்கப்பட்டது.
இதுதவிர, கிரானைட் அதிபர் பி.ஆர்.பி வழியிலும் பல மாவட்டங்களில் பல கிரானைட் குவாரிகள் வாங்கிப் போடப்பட்டன.
கேரளாவில் 1500 ஏக்கரில் டீ எஸ்டேட் ஒன்று புதிதாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அது, உம்மன்சாண்டி மூலம் ஜெயலலிதாவின் காதுகளுக்கு வந்தது.
ஆனாலும், அதை அதை பெரிதாகக் கண்டு கொள்ளாத ஜெயலலிதா, பன்னீர்செல்வத்தைக் கொஞ்சம் தள்ளிவைக்க ஆரம்பித்தார்.
அதேபோல், பொதுப்பணித்துறையில், அவர் போட்ட ஆட்டம் காரணமாகவே, அரை குறை வேலைகளுக்கும், நடக்காத பல வேலைகளுக்கும் ஒப்பந்த தொகை பெறப்பட்டது.
அதன் காரணமாகவே, கடந்த 2015 ம் ஆண்டு சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி சின்னா பின்னமாயின.
இவ்வாறு பல்லாயிரம் கோடி ரூபாயை அவர் சம்பாதித்த பிறகே, இன்று சசிகலா குடும்பத்திற்கே சவால் விடும் அளவுக்கு வசதி ஆகி உள்ளார்.
மறுபக்கம் குடும்ப அரசியல் என்று சசிகலாவை விமர்சிக்கும் பன்னீர்செல்வம் மட்டும் குடும்ப அரசியலுக்கு அப்பாற்பட்டவரா என்ன?
அவரது தம்பி ராஜா அடாவடி அரசியலுக்கு பெயர் பெற்றவர். அவர் மீது கொலை வழக்கே பதிவாகி உள்ளது. அவரது மகன் ரவீந்திர நாத்தும் கட்சிப் பொறுப்பில் இருக்கிறார்.
அதிமுக ஆட்சியில் சசிகலாவுக்கு நிகராக சொத்து சேர்த்தவர், சசிகலாவுக்கு நிகராக குடும்ப அரசியல் செய்பவர், ஊழல் செய்தவர் என்பதில் இருந்து பன்னீரையும் பிரித்துப்பார்க்க முடியாது.
ஓடி போனவனுக்கு ஒன்பதில் குரு, அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி என்பது போல, பன்னீருக்கு குரு செல்வாக்கை கொடுத்துள்ளது. சசிகலாவை சனி சிறையில் அடைந்துள்ளது.