கூட்டத்தில் கோவிந்தா போடும் சமக - வேட்பாளரை அறிவித்தார் சரத்குமார்..!!
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடுகிறது. வேட்பாளராக கட்சியின் துணை பொது செயலாளர் சேவியர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது. வடசென்னை மாவட்ட செயலாளராக கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து, சென்னை பெருமண்டல செயலாளராக 4 ஆண்டுகள் பணிபுரிந்து, தற்போது மாநில துணை பொதுச்செயலாளர் என பதவி உயர்வு பெற்ற அந்தோணி சேவியரை சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கிறேன்.
வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ராயபுரம் கே.விஜயனை மாற்று வேட்பாளராக அறிவிக்கிறேன். எங்களது கடும் உழைப்பும், இளைஞர்களின் விழிப்புணர்ச்சியும் ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு ஜனநாயகத்தின் மேல் உள்ள நம்பிக்கையும் வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் என்ற மிகுந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
எனவே, ஆர்.கே. நகர் தொகுதியின் பிரச்சனைகளை முழுவதும் அறிந்த அந்தோணி சேவியர் அந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் இந்த தொகுதியின் முன்னேற்றத்துக்கும் உழைக்க காத்திருக்கிறார்.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. இதையொட்டி சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அந்தோணி சேவியர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.