அம்மா வீட்டு நாற்காலிக்கு ஆணிபிடுங்குனவனுக்கு துபாய், குவைத் வளைகுடா நாடுகளில் சொத்தா?: சஜீவனை வெச்சு செய்யும் வாட்ஸ் ஆப் குரூப்...
தமிழகத்தின் கொங்கு மாவட்டங்களில் கோயமுத்தூர், நீலகிரி என இரண்டு இடங்களில்தான் ரெய்டு கொடி உயர பறந்தது. இங்கு சிக்கியவர்களில் முக்கியமானவர்கள் கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜன், கொடநாடு பங்களாவுக்கு மரசாமான் செய்து கொடுத்தும், உடைந்து போன மரசாமான்களை சரி செய்து கொடுத்த படியும் இருந்த சஜீவன், மணல் மன்னர் ஆறுமுகசாமி ஆகியோர்தான்.
இதில் சஜீவனுக்கு கடல் தாண்டியும் சொத்துக்கள் இருப்பதாக அவரது சொத்துக்களை ஆடிட்டிங் செய்த போது ஐ.டி. துறை கண்டுபிடித்திருக்கிறது என்கிறார்கள். கோயமுத்தூரில் ஆர்.எஸ்.புரம் எனும் காஸ்ட்லி பகுதியில் மிகப்பெரிய பர்னிச்சர் ஷோரூமை கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் திறந்திருக்கிறார் சஜீவன்.
இது போக அதே ஊரில் மேலும் ஒரு குடோன், பங்களா வீடு என வாழ்ந்து வந்தது ஆச்சரிய அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இதுபோக ஊட்டி, கூடலூர் என நீலகிரி மாவட்டத்திலும் முரட்டுத்தனமாக சொத்தை குவித்திருக்கிறார்.
இதுமட்டுமா? சஜீவன் அடிக்கடை துபாய், குவைத் என வளைகுடா நாடுகளுக்கு பறக்கிறாராம். அதனால் வளைகுடாவில் ஏதேனும் சொத்துக்களில் இன்வெஸ்ட் செய்திருக்கிறாரா என்றும் நோண்டியதாம் ஐ.டி. துறை. அதற்கும் பாஸிடீவாகவே ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன என்கிறார்கள். அந்நாட்டு வருமான வரித்துறை அமைப்புடன் இணைந்து அந்த சொத்துக்களின் நதிமூலம் பற்றிய விசாரணை விரைவில் துவங்கும் என்கிறார்கள்.
சஜீவனிடம் இவ்வளவு சொத்துக்கள் குவிந்திருப்பது வெளியே தெரிந்த வகையில் ஆடிப்போயிருக்கின்றனர் அ.தி.மு.க.வினர். கொங்கு மாவட்டங்களில் அ.தி.மு.க.வின் ஒரு பவர் சென்டராகவே வலம் வந்த காரணத்தால் ஒரு காலத்தில் சஜீவனால் பாதிக்கப்பட்ட அ.தி.மு.க.வினர் இப்போது ‘அம்மா வீட்டு நாற்காலிக்கு ஆணி புடுங்குனவனுக்கு எவ்ளோ சொத்து பாருங்க’ என்று தங்களது வாட்ஸ் ஆப் குரூப்புகளில் வெச்சு செய்கிறார்களாம் சஜீவனை.