சபரிமலையில் தொடரும் வன்முறை … அரசுப் பேருந்துகளை உடைத்து நொறுக்கிய பக்தர்கள்.. 20 பேர் காயம்….
சபரிமலை மற்றும் நிலக்கல் பகுதியில் நிமிடத்துக்கு நிமிடம் வன்முறை வெடித்து வருகிறது. அறவழியில் போராடுவோம் என தெரிவித்திருந்த பக்தர்கள் தற்போது வன்முறையில் இறங்கியுள்ளனர். அப்பகுதியில் பல அரசுப் பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. 20 க்கும் மேற்பட்டோர் காயடைந்துள்ளனர்
அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் செல்லாம் என உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் பரபரப்பான சூழ்நிலையில் சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததால், அனைத்து வயது பெண்களும் கோவிலுக்கு புறப்பட்டு வந்தனர். ஆனால், அவர்களை போராட்டக்குழுவினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே வன்முறையும் வெடித்துள்ளது.
சபரிமலை செல்லும் பாதைகளில் பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பெண் பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
இந்த வன்முறை மற்றும் தடியடியில் 5 பக்தர்கள், 15 போலீசார் காயமடைந்ததாகவும், 10 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் கேரள அமைச்சர் ஜெயராமன் தெரிவித்தார்..
இந்த வன்முறைக்கு ஆர்எஸ்எஸ் தான் காரணம் என்றும், போராட்டத்தின் பின்னணியில் அவர்கள் இருப்பதாகவும் அமைச்சர் ஜெயராமன் குற்றம் சாட்டினார். பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.