ராஜ்யசபா எம்பி பதவி..! தலித் அரசியல் Vs சபரீசன் அரசியல்..! திமுகவில் களேபரம்..!
ராஜ்யசபா எம்பி பதவி விவகாரத்தில் திமுகவில் தலித்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்கிற விவகாரம் சூடு பிடித்துள்ளது.
ராஜ்யசபா எம்பி பதவி விவகாரத்தில் திமுகவில் தலித்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்கிற விவகாரம் சூடு பிடித்துள்ளது.
தமிழகத்தில் இருந்து காலியாகும் 6 மாநிலங்களவை எம்பி பதவிகளில் 3ஐ திமுக தனக்கு உள்ள எம்எல்ஏக்கள் பலம் மூலம் பெற முடியும். அந்த வகையில் 3 ராஜ்யசபா எம்பிக்கள் திமுகவிற்கு கன்பார்ம். அதில் ஒரு பதவியை வைகோவிற்கு திமுக கொடுக்க உள்ளது. எஞ்சிய இரண்டு எம்பி பதவிகளுக்கு தான் கடும் போட்டி நிலவி வருகிறது. இதுவரை ராஜ்யசபா எம்பியாக இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்கிற முடிவில் ஸ்டாலின் உறுதியாக உள்ளதாக கூறுகிறார்கள். அதே சமயம் தனக்கு நெருக்கமானவர்கள் தான் டெல்லியில் இருக்க வேண்டும் என்று அவரது மருமகன் சபரீசன் கருதுகிறார்.
இதனால் ராஜ்யசபாவிற்கு 2 எம்பிக்களை பைனல் செய்வதில் திமுகவில் பெரிய களேபரமே நடைபெற்று வருகிறது. ஏனென்றால் மக்களவை தேர்தலில் இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டு கூட்டணி கட்சிக்கு நாகை தொகுதியை விட்டுக் கொடுத்த ஏ.கே.எஸ் விஜயன் மாநிலங்களவை எம்பியாக முயற்சித்து வருகிறார்.
விஜயனுக்கு திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா மற்றும் கனிமொழியின் ஆதரவு இருப்பதாக சொல்கிறார்கள். அதே சமயம் தொமுசவின் பொதுச் செயலாளராக இருக்கும் சண்முகத்திற்கு எம்பி பதவியை கொடுக்க ஸ்டாலின் விரும்புவது போல் தெரிகிறது. ஏனென்றால் தொமுச பொதுச் செயலாளராக இருப்பவரை எம்பியாக வைத்திருப்பது கலைஞர் காலத்து மரபு.
இதே போல் ஸ்டாலின் மகன் உதயநிதிக்காக இளைஞர் அணி தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க முன்வந்துள்ள வெள்ளக் கோவில் சாமிநாதனும் ராஜ்யசபா எம்பி ஆக விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் எல்லோரையும் மீறி தனது வழக்கறிஞர்கள் குழுவில் மிக முக்கியவரான கிரிராஜனை எம்பியாக்க சபரீசன் விரும்புகிறார்.
2 பதவிகளுக்கு சுமார் 4 பேர் போட்டியில் உள்ள நிலையில் தலித் என்கிற காரணத்திற்காக ஏகேஎஸ் விஜயனுக்கு எம்பி பதவியை கொடுக்க வேண்டும் என்று முழக்கம் அதிகரித்துள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் அதை எல்லாம் பற்றி கவலைப்படாமல் கிரிராஜனை எம்பியாக்க சபரீசன் ஏற்கனவே தேவையான அனைத்தையும் செய்துவிட்டதாக கூறுகிறார்கள்.