கொரோனா 2வது அலையில் சிக்கிய கிராமப்புறங்கள்.. பரிசோதனையை அதிகரிக்க பிரதமர் மோடி உத்தரவு..!
கொரோனா முதல் அலையின்போது கிராமப்புறங்கள் பாதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது இரண்டாவது அலையில் பல்வேறு மாநிலங்களில் கிராமப்பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது.
கிராமப்புறங்களில் வீடு வீடாக சென்று சோதனை மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என என பிரதமர் மோடி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து கடந்த 3 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால், உயிரிழப்பு எண்ணிக்கை மட்டும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கொரோனா பரவல் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி மேலாண்மை தொடர்பாக பிரதமர் மோடி அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறுகையில்;- கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கைகளில் எந்தவொரு அழுத்தமும் இல்லாமல் மாநில அரசுகள் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
கிராமப்புறங்களில் ஆக்சிஜன் செறிவூட்டல் உட்பட ஆக்சிஜன் விநியோகத்தை உறுதி செய்வதற்கான விநியோக திட்டத்தை உருவாக்க வேண்டும். இதுபோன்ற மருத்துவ உபகரணங்களை இயக்குவதற்கு சுகாதார பணியாளர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மேலும் இது போன்ற மருத்துவ சாதனங்களை சீராக இயக்குவதற்கு ஏதுவாக மின்சார விநியோகத்தையும் உறுதி செய்ய வேண்டும்.
கொரோனா முதல் அலையின்போது கிராமப்புறங்கள் பாதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது இரண்டாவது அலையில் பல்வேறு மாநிலங்களில் கிராமப்பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது. ஆர்டி-பிசிஆர் மற்றும் ரேபிட் சோதனை ஆகிய இரண்டையும் பயன்படுத்துவதன் மூலமாக சோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும். கிராமப்புறங்களில் வீடு வீடாக சென்று சோதனை மற்றும் கண்காணிப்பதில் கவனம் செலுத்துவதற்கான சுகாதார வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.