RSS party man killed in kerala thrissur
கேரள மாநிலம் திருச்சூரில் முன்விரோதம் காரணமாக ஆர்.எஸ்.எஸ் தொண்டர் ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களிடையே தொடர்நது மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்நிலையில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஆனந்த். என்ற ஆர்.எஸ்.எஸ் தொண்டர். தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ஒன்று அவர் சென்ற இருசக்கர வாகனம் மீது காரை மோதியது.

இதனால் ஆனந்த் வாகனத்தில் இருந்து தடுமாறி சாலையில் விழுந்தார். உடனே காருக்குள் இருந்து இறங்கிய மர்ம கும்பல் ஒன்று, அவரை அரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், படுகாயம் அடைந்த ஆனந்தை மீட்டு சாவக்காடு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித் தொண்டர் பாஸில் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் ஆனந்த் முக்கியக் குற்றவாளி என கூறப்படுகிறது.

அண்மையில்தான் ஆனந்த் ஜாமீனில் வெளிவந்தார் என்றும் பாஸில் கொலைக்கு பழிவாங்கும் விதமாக ஆனந்த கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனந்த் கொலை செய்யப்பட்டதையடுத்து திருச்சூர் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
ஏற்கனவே கடந்த ஜுலை மாதம் 29 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் ராஜேஸ் என்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
கேரள மாநிலத்தில் கடந்த 2000 முதல் 2016 வரை 69 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது போன்ற அரசியல் கொலைகள் அடிக்கடி நடைபெறுவது கேரளாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
