ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை நான் தொடங்கி வைக்கிறேனா..! - ஜகா வாங்கிய அமைச்சர் செல்லூர் ராஜு...
மதுரையில் அக்.,8ல் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தொடங்கி வைப்பதாக நான் யாரிடமும் கூறவில்லை என்றும் தன்னை கேட்காமலேயே ஆர்.எஸ்.எஸ். ஊர்வல அழைப்பிதழில் பெயர் அச்சிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
1925 ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தில் துவங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆண்டுதோறும் விஜயதசமி அன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இந்த வருடம் ஆர்.எஸ்.ஏஸ். ஊர்வலம் கொண்டாடப்பட உள்ளது. மதுரையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, இந்த ஊர்வலத்தை துவக்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியானது.
மதுரை, ராமராயர் மண்டபம், மதிச்சியம் என்ற இடத்தில் இந்த ஊர்வலம் துவங்க உள்ளது. இதுகுறித்த நோட்டீஸில் செல்லூர் ராஜுவின் பெயர் இடம் பெற்றுள்ளது.
அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை துவங்கி வைக்க உள்ளதாக வந்த வந்த தகவலை அடுத்து, எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் நடைபெறும் ஆட்சி எனக் கூறிக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தொடங்கி வைப்பது துரோகச் செயல் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், மதுரையில் அக்.,8ல் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தொடங்கி வைப்பதாக நான் யாரிடமும் கூறவில்லை என்றும் தன்னை கேட்காமலேயே ஆர்.எஸ்.எஸ். ஊர்வல அழைப்பிதழில் பெயர் அச்சிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.