ரெய்டில் சிக்கிய ரூ.60 கோடி பங்கு முதலீடு ஆவணங்கள்.. அறிக்கை வாசித்த லஞ்ச ஒழிப்பு துறை.. சிக்கும் இளங்கோவன்.!
சேலத்தில் அதிமுக நிர்வாகியும் மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன் வீட்டில் ரூ. 60 கோடி மதிப்பில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பங்கு முதலீடு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக தலைமை கூட்டுறவு வங்கி தலைவரும் அதிமுக நிர்வாகியும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வலதுகரமாக கருதப்படுபவருமான இளங்கோவன், அவருடைய மகன் பிரவீன்குமார் ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து இவர்கள் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்நிலையில் இந்தச் சோதனை விபரங்கள் குறித்து அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ளது.
அதில், “மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், சுவாமி அய்யப்பன் கல்வி அறக்கட்டளை துணை தலைவரும், இளங்கோவனின் மகனுமான பிரவீன்குமார், குடும்ப உறுப்பினர்கள் பெயரில் தனது பணிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, , சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதன்படி சென்னை 3, கோவை 1, நாமக்கல் 3, திருச்சி, முசிறி 6, சேலம் 23 என மொத்தம் 36 இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, சென்னையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ரூ. 5.5 லட்சம் மதிப்பிலான அந்நிய செலாவாணி, ரூ. 25 கோடியில் உள்நாட்டு பங்கு வர்த்தக முதலீடுகள் மற்றும் ரூ.45 கோடியில் வெளிநாட்டு நிறுவன பங்கு முதலீடுகள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், சேலம் மாவட்டம், வாழப்பாடியில் உள்ள ஒரு நகை கடையில் 20 கிலோ தங்க நகைகள் மற்றும் 280 கிலோ வெள்ளி நகைகள் இருப்பைவிட கூடுதலாக இருப்பது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கும்படி, உரிய துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கிற்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.