உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி வழங்க வேண்டும்.. ஸ்டாலினை ரவுண்டு கட்டும் எல்.முருகன்.
உடனடியாக முதலமைச்சர் தன் வாக்குப்படி, உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூபாய் 1 கோடியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஸ்டாலின் தன் வாக்குப்படி ரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி வழங்க வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள். கடந்த ஆட்சியில் கூட இதே ரூபாய் 25 லட்சம் தான் இழப்பீடாக கொடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஏதோ அதிகப்படுத்தி இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பது ஏமாற்றம் அளிப்பதோடு, அதிர்ச்சியும் அளிக்கிறது.
கடந்த வருடம் மே 15 ஆம் தேதி அன்று திமுக உள்ளிட்ட 11 கட்சி கூட்டணியினர், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு சிறப்பு ஊதிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தமிழக அரசு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த வருடம் ஆகஸ்டு 6ஆம் தேதி அன்று அதிமுக அரசு முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடாக கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு செய்தபோது, கடுமையாக எதிர்த்த திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஏப்ரல் 2020 அறிவித்தபடியே ரூபாய் 50 லட்சத்திலிருந்து ரூபாய் 25 லட்சமாக குறைத்ததை கடுமையாக ஆட்சேபித்து, 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
" சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் " என்ற திருவள்ளுவரின் குரலுக்கு ஏற்ப எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒன்று பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது மாற்றிப் பேசுவது அழகல்ல.
ஆகவே உடனடியாக முதலமைச்சர் தன் வாக்குப்படி, உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூபாய் 1 கோடியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.