அடையாளம் தெரியாத நபர்களால் நிரம்பி வழியும் ஆர்.கே.நகர்: கார் மீது படுத்து உறங்கும் பொது மக்கள்!
ஆர்.கே.நகர்த் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம், பத்து பதினைந்து இளைஞர்களுடன் நடந்தே சென்று வாக்கு சேகரிக்கிறார்.
மார்க்சிஸ்ட் லோகநாதன், கொளுத்தும் வெயிலிலும், இடைவெளி விடாமல் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
என் தேசம் என் உரிமை கட்சி ஜெயந்தியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால், அதற்கான விளக்கம் கேட்டு, தினமும் தேர்தல் அலுவலகத்திற்கு நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்.
தி.மு.க வழக்கறிஞர் பிரிவு, தினமும் ஏதாவது ஒரு பகுதியில், பணப் பட்டுவாடா நடக்கிறது என்று புகார் கூறுவதிலும், சாலை மறியல் செய்வதிலும் பிசியாக இருக்கிறது.
சாதிவாரியாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும், தங்கள் சமூக மக்களை தவிர வேறு யாரையும் சந்திப்பதில்லை.
காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களில், அறிமுகம் இல்லாத பலர் நடமாடுவது போல, யார் யாரோ, எங்கிருந்தோ வந்து குவிந்துள்ளனர்.
வீட்டை விட்டு வெளியே வருபவர்கள், கடை கன்னிக்கு வருபவர்களை கண்டால் உற்சாகம் அடையும் அவர்கள், நைசாக பேசி, தங்கள் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கின்றனர்.
தொகுதியில் கார் பார்க்கிங் இல்லாததால், அங்குள்ள ஐந்து மேம்பாலங்களின் கீழ் கார்கள் நிற்கின்றன. அதனால், மேம்பாலத்தின் கீழ் வசித்தவர்கள் கார்கள் மீது உறங்கி வருகின்றனர்.