நக்கீரன் கோபால் கைதுக்கு காரணமான நக்கீரன் புத்தகம்...
நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து புனே செல்லவிருந்த நக்கீரன் கோபாலை காவல்துறையினர் கைது செய்தனர். நக்கீரன் இதழில் ஆளுநர் மற்றும் நிர்மலாதேவி விகாரம் தொடர்பான கட்டுரை வெளியிட்டதால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நான்கு முறை கவர்னரை சந்தித்தேன்’ என்ற கவர் ஸ்டோரியுடன் நேற்று நள்ளிரவு கடைக்கு நக்கீரன் இதழே கோபாலின் அதிரடி கைதுக்கு காரணம் என்று தெரிகிறது.
அருப்புக்கோட்டை நிர்மலா தேவி விவகாரம் செய்திகளில் அடிபட ஆரம்பித்த பிறகு, அச்செய்தி வராத நக்கீரன் இதழே இல்லை எனும் அளவுக்கு தொடர்ந்து பரபரப்பு கிளப்பி வந்தனர். கவர்னர் தரப்பிலிருந்து தங்களுக்கு நெருக்கடி வராமல் இருக்க உபகாரமாக இருந்ததால், இச்செய்திகளை அ.தி.மு.க. வட்டாரம் சப்புக்கொட்டி ரசித்து வந்ததாகவே தெரிகிறது.
இந்நிலையில் தொடர்ந்து தனது இமேஜ் டேமேஜ் ஆவதால் கவர்னர் பொறுமையை இழந்தார். இனி பொறுத்தால் ‘செக்ஸ் புகார்களில் சிக்கிச் சீரழியும் இந்தி சினிமாக்காரர்கள் ரேஞ்சுக்கு நம்மைக் கொண்டுபோய் நிறுத்திவிடுவார்கள் என்று நினைத்தே அடுத்த கட்ட நட்வடிக்கைக்கு தயாரானார்.
இதைத்தொடர்ந்து கிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் சென்னை விமானநிலையத்திலிருந்து புனே செல்லவிருந்த ஆசிரியர் நக்கீரன் கோபால் அடையாறு சரக போலீசார் கைது செய்தனர்.
அவரைக் கைது செய்தபோது போலிஸாரிடம் கைதுக்காக வாரண்ட் உட்பட எந்த ஆவணங்களும் இல்லை என்று சொல்லப்பட்டது. கோபால் தனது கைதுக்கான காரணம் கேட்டபோது போலிஸார் மவுனமாக இருந்தனர்.
முதலில் அடையாறு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரிப்பதாக கூறப்பட்டு அலைக்கழிப்பு செய்யப்பட்ட நிலையில் அவரை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்மீது 124-A எனப்படும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
கோபாலின் கைதுக்கு அரசியல் தலைவர்கள் வரிசையாக கண்டனம் தெரிவிக்கத்துவங்கியிருக்கும் நிலையில் முகநூல் போராளிகள், ‘முந்தைய காலங்களில் அண்ணன் கோபால் மீது கை வைத்தபோதெல்லாம் ஆளுங்கட்சியின் அஸ்திவாரமே நொறுங்கியது என்பது வரலாறு. அது தொடரும்’ என்று அண்ணனுக்கு ஜே’ போட ஆரம்பித்திருக்கிறார்கள்.