ரேஷன் அரிசி கடத்தல்.. பக்கத்து மாநில மாஜி முதல்வர் சொல்லும் அளவுக்கா இருப்பது.? திமுக அரசை விளாசிய கேப்டன்!
தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். பக்கத்து மாநில முன்னாள் முதல்வர் சுட்டிக்காட்டும் அளவுக்கு இந்த அரசு செயல்படுவது என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
ரேஷன் அரிசியை கள்ளச் சந்தையில் வாங்கி, அதனை அண்டை மாநிலங்களுக்கு கடத்திச் சென்று வியாபாரம் செய்யும் கடத்தல்காரர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தி கொண்டு வரப்பட்டு, அந்த அரிசியை பாலிஸ் செய்து கிலோ ரூ.40க்கு ஆந்திராவில் விற்பதாகவும், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும் என்றும் ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச தலைவருமான சந்திரபாபு நாயுடு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை அடிப்படையாக வைத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். பக்கத்து மாநில முன்னாள் முதல்வர் சுட்டிக்காட்டும் அளவுக்கு இந்த அரசு செயல்படுவது என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
ரேஷன் அரிசி அதிக அளவில் கடத்தப்படுவது தமிழகத்தில் இருந்துதான் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த ரேஷன் அரிசியை சிலர் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கடத்திச் சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் ரேஷன் கடை ஊழியர்கள் உணவு பொருட்களை பதுக்கி வைத்து, அதனை கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். அதனை உடனடியாக தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை கள்ள சந்தையில் வாங்கி, அதனை அண்டை மாநிலங்களுக்கு கடத்திச் சென்று வியாபாரம் செய்யும் கடத்தல்காரர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸார் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்.” என்று அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆந்திராவுக்கு ரேஷன் அரிசியை கடத்தி ரூ.40க்கு விற்கிறாங்க.. கடத்தலை தடுக்க ஸ்டாலினுக்கு சந்திரபாபு கடிதம்!