ஜனநாயகத்தை பணநாயகம் விழுங்கத் தொடங்கியிருக்கிறது... ட்விட்டரில் கர்ஜிக்கும் ராமதாஸ்!
ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தினகரன் முன்னிலை. ஏற்கனவே கூறியதைப் போன்று ஜனநாயகத்தை பணநாயகம் விழுங்கத் தொடங்கியிருக்கிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு பதிவு குறித்து பதிவிட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 5 வது சுற்று முடிவில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் 53.16% வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அதிமுக 25.33% வாக்குகளும், திமுக 13.18% வாக்குகளும் பெற்றுள்ளனர். தினகரனே முதலிடத்தில் உள்ளதால் ஆளுங்கட்சி கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் மதுசூதனனை முதியுள்ளார் தினகரன். தினகரனிடம் மட்டுமல்லாது, ஆளும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனைவிடவும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளது திமுக. எனவே மூன்றாவது இடத்திற்குத்தான் செல்கிறது திமுக.
ஒட்டுமொத்த கவனத்தையும் தன்பக்கம் திருப்பிய தினகரனுக்கு ஒரு பக்கம் வாழ்த்தும் மறுபக்கம் பணத்தால் தான் தினகரன் முன்னிலை வகிக்கிறார் வெற்றிபெறுவார் என அரசியல் தலைவர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தினகரன் முன்னிலையில் வருவதால் பணநாயகம் வென்று விட்டது என அதே பழைய வசனத்தை இப்போதும் பதிவிட்டுள்ளார்.
தனது முதல் பதிவில்... ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தினகரன் முன்னிலை. ஏற்கனவே கூறியதைப் போன்று ஜனநாயகத்தை பணநாயகம் விழுங்கத் தொடங்கியிருக்கிறது என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில்... ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வன்முறையாளர்களை வெளியேற்றி விட்டு அமைதியாக வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும்!
அடுத்ததாக... ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து பத்திரிகையாளர்களை வெளியேற்ற முயற்சி. சாட்சிகள் இல்லாமல் வன்முறை நிகழ்த்தத் திட்டம். இந்த சதியை அனுமதிக்கக்கூடாது.
கடைசியாக ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இரண்டாம் சுற்றிலேயே ஆளுங்கட்சி வன்முறை: முதலில் பண பலத்தையும், பின்னர் படைபலத்தையும் பயன்படுத்தத் துடிப்பது கண்டிக்கத்தக்கது. வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தனது ஆதங்கத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.