Ramadoss: பாமகவை விட்டு போனவங்க எலும்பு துண்டுக்கு ஆசைப்பட்ட நாய்கள்.. ராமதாஸ் பொளேர்..
பாமகவை விட்டு வேறு கட்சிகளுக்கு போனவர்கள் எல்லாம் எலும்பு துண்டுக்கு ஆசைப்பட்ட நாய்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆவேசமாக கூறி உள்ளார்.
சென்னை: பாமகவை விட்டு வேறு கட்சிகளுக்கு போனவர்கள் எல்லாம் எலும்பு துண்டுக்கு ஆசைப்பட்ட நாய்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆவேசமாக கூறி உள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக் குழு கூட்டம் சென்னை சேப்பாத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள், பிரகடனங்கள் வெளியிடப்பட்டன. 2021ம் ஆண்டுக்கு விடை கொடுப்போம், 2022ம் ஆண்டை வரவேற்போம் என்ற தலைப்பில் இந்த கூட்டம் நடைபெற்றது.
பாமகவின் தலைமையில் 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிப்பது லட்சியம் என்று கூறி பொதுக்குழுவில் தீர்மானம் இயற்றப்பட்டது. பாமகவை அனைத்து கிராமங்களிலும் வலுப்படுத்துவது, தமிழகத்தை பாட்டாளி ஆள வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியிருப்பதாவது: 2026ல் தமிழகத்தை பாமக ஆள வேண்டும். அதற்கு கட்சியில் உள்ள இளைஞர்கள், மூத்தோர்கள் அனைவரும் சேர்ந்து அதனை அணுகுவோம். பாமகவின் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். மக்களை சந்திப்போம், அவர்களின் நம்பிக்கையை பெறுவோம்.
இன்றைய சூழலில் அதை செய்தால் மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து நமக்கு வெற்றியை கொடுப்பார்கள். தமிழகத்தின் முதலமைச்சராக வேண்டும் என்ற பதவி வெறி இல்லை. ஆனால் தமிழகத்தை பாட்டாளி மக்கள் கட்சி ஆள வேண்டும். வன்னியர்களின் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நிச்சயம் பெறுவோம்.
பாமக தொடங்கி 32 ஆண்டுகள் ஆன பின்னரும் நம்மால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இனி இப்படியே இருக்கமுடியாது. எடப்பாடி 4 ஆண்டுகள் எளிமையான முதலமைச்சராக இருந்தார். ஏகப்பட்ட எதிர்ப்புகளுக்கு இடையே வன்னியர் இட ஒதுக்கீட்டை தந்தார். ஆனால் உயர் நீதிமன்றம் சப்பைக்கட்டு சொல்லி தடுத்தது என்று கூறினார்.
அதனை தொடர்ந்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது: வருகின்ற பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் எல்லா இடங்களிலும், வார்டுகளிலும் நாம் போட்டியிட வேண்டும்.
அப்படி போட்டியிடாமல் நாம் விட்டுக் கொடுத்துவிட்டோம். லோக்கல் அண்டர்ஸ்டாண்டிங் (local understanding) என்று யாராவது நினைத்தால் அந்த நிமிடமே உங்களின் பதவி காலியாகிவிடும். ஏன் என்றால் இதுவரை நடந்த தவறுகளை மன்னித்தோம். இனிமேல் தவறுகள் நடந்தால் மன்னிக்க மாட்டோம். உங்களுடைய பதவி பறிபோய்விடும்.
வன்னிய இளைஞர்கள் வேறு கட்சிகளுக்கு ஓடுகிறார்கள். மானமுள்ள வன்னியன், மானமுள்ள இந்த கட்சியில் இருந்து வேறு கட்சிக்கு செல்ல மாட்டான். அப்படி அவன் செய்தாலும் அவன் எலும்புத்துண்டுக்காக ஆசைப்பட்டு ஓடுகிறவன். யாராக இருந்தாலும் அவனுக்கு கிடைக்கிற மரியாதை நாய்க்கு, பன்றிக்கு கிடைக்கின்ற மரியாதையை விட குறைவாக தான் இருக்கும்.
மரியாதையுள்ள கட்சி, மானமுள்ள கட்சி, தீரமுள்ள கட்சி, பாமக என்று உணர வேண்டும். வேறு கட்சிக்கு போனால்… போனால் போகட்டும் போடா தான். அய்யோ நீ போகாதே என்று சொல்லாதே. ஓடுகின்ற நாய் ஓடட்டும், எலும்புத்துண்டுக்காக ஓடுறவன். அதை பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள் என்று ராமதாஸ் பேசினார்.