பாமகவின் 20 ஆண்டுகால கனவை நிறைவேற்றிய அதிமுக.... எடப்பாடிக்கு ராமதாஸ் பாராட்டு..!
பாட்டாளி மக்கள் கட்சியின் 20 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த பயன் அதிமுக ஆட்சியில் கிடைத்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர், ‘’வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர், இராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் இன்று உதயம். பாட்டாளி மக்கள் கட்சியின் 20 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த பயன். எனது கனவும், மக்களின் எதிர்பார்ப்புகளும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி.
பள்ளி மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கட்டாய உடற்பயிற்சித் திட்டம் வரவேற்கத் தக்கது. தமிழக அரசுக்கு பாராட்டுகள். அதேநேரத்தில் காலை நேரத்து கடுமையான வெயிலில் மாணவர்கள் பாதிக்கப்படாமல் அரசும், ஆசிரியர்களும் கவனம் செலுத்த வேண்டும்!
மகிழுந்து விபத்துகளில் ஏற்படும் 78% உயிரிழப்புகளுக்கு இருக்கைப் பட்டை அணியாதது தான் காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கும் உண்மை ஆகும். மகிழுந்தில் இருக்கைப் பட்டை அணிவதையும், இரு சக்கர ஊர்திகளில் தலைக்கவசம் அணிவதையும் அனிச்சை செயலாக்கிக் கொள்ள வேண்டும்’’எனத் தெரிவித்துள்ளார்.