பாமக மாநில துணை தலைவர் என கூறி பொதுமக்களிடம் பணம் பறித்த நபர்..! அதிரடி நடவடிக்கை எடுத்த ராமதாஸ்
பாமகவில் எந்த பொறுப்பிலும் இல்லாமல் புகார் மனுக்களை அனுப்புவதாக மிரட்டி பணம் வசூலித்த குணசேகரன் என்பவரை கட்சியில் இருந்து நீக்கி பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
பணம் பறித்த பாமக உறுப்பினர்
கரூர் மாவட்டத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர் பாமக கட்சியில் உறுப்பினராக உள்ளார். ஆனால் மாநில தலைவராக இருப்பதாக கூறி அப்பகுதியை சேர்ந்த மக்களை மிரட்டி பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இந்த புகார் பாமக தலைமையிடத்திற்கு சென்ற நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மாவட்டம் கரூர் மாநகரம் பிரதட்சணம் சாலையைச் சேர்ந்த கே.குணசேகரன் என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் என்று கூறிக் கொண்டு,
அதிரடி நடவடிக்கை எடுத்த ராமதாஸ்
புகார் மனுக்களை அனுப்பி பணம் பறிப்பது உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதால், இன்று (19.01.2023) வியாழக்கிழமை முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் ஒப்புதலுடன் நீக்கப்படுகிறார். அவருடன் பாமகவினர் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்