முதலில் முதலமைச்சர்.. அப்புறமா பிரதமர்!! அடேங்கப்பா.. பயங்கரமான பிளானா இருக்கே
ஜெயலலிதாவும் கருணாநிதியும் அரசியல் களத்தில் இல்லாத சூழலில் ரஜினியும் கமலும் அரசியலுக்கு வருகின்றனர்.
கடந்த ஆண்டு ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை. போர் வரும் போது பார்த்துக்கொள்வோம் என பேசினார். ரஜினியின் இந்த பேச்சு, அவரது அரசியல் பிரவேசம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. அதன்பிறகு, கடந்த டிசம்பர் 31ம் தேதி, தனது அரசியல் பிரவேசத்தை வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார்.
ரஜினி அரசியலுக்கு வரும் நிலையில், கமலும் அரசியலுக்கு வருகிறார். ரஜினி மற்றும் கமலின் அரசியல் பிரவேசங்கள் தமிழக அரசியல் களத்தில் மேலும் பரபரப்பாக்கியுள்ளது.
ரஜினி மற்றும் கமல் ஆகியோர் இணைந்து செயல்படுவது குறித்து இருவரிடமும் கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் இருவருமே வெளிப்படையாக பதிலளிக்காமல், காலம் தான் பதில் சொல்லும் என நழுவுகின்றனர்.
இந்நிலையில், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் தமிழ்நாட்டில் மட்டும்தான் சிஸ்டம் சரியில்லையா? அல்லது இந்தியா முழுவதுமே சிஸ்டம் சரியில்லையா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், முதலில் தமிழ்நாட்டில் சரிசெய்ய வேண்டும் என கூறினார். அப்படியென்றால் நாடு முழுவதுமே சிஸ்டம் சரியில்லை. ஆனால் அதை பிறகு பார்த்துக்கொள்வோம் என்ற அர்த்தம் பொதிந்த வகையில் இந்த பதில் உள்ளது. இதையடுத்து தேசிய அரசியலிலும் ரஜினி நுழைவாரோ என்ற கேள்வி எழுகிறது.
தமிழ்நாட்டு முதலமைச்சராகும் கனவோடு சிஸ்டம் சரியில்லை என கூறிய ரஜினிகாந்த், தேசிய அளவிலும் சிஸ்டம் சரியில்லாமல் தான் இருக்கிறது என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார். அதனால் பிரதமராகும் ஆசையும் ரஜினிக்கு இருக்கிறதோ என்ற கேள்வியும் கூட எழாமல் இல்லை.
கமலுடனான கூட்டணி குறித்த கேள்விக்கு வழக்கம்போலவே காலம்தான் பதில் சொல்லும் என தெரிவித்துவிட்டார். அதேபோலத்தான் ரஜினிக்கு பிரதமராகும் ஆசை இருக்கிறதா என்பதற்கும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..