rajini planning to join jegathratchagan with him
ரஜினி தனி கட்சி தொடங்குவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது, கட்சி கொடி சின்னம் கூட தயாராகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
சினிமா நட்சத்திரங்கள், மற்ற கட்சிகளை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் சிலரும் ரஜினி கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.
பாஜகவில் சேராத ரஜினி, தனி கட்சி தொடங்கினாலும், அக்கட்சிக்கு எதிராக அவர் செயல்பட மாட்டார் என்பதும், பாஜக கூட்டணியில் நிச்சயம் இடம் பெறுவார் என்றும் கூறப்படுகிறது.

அப்படி ரஜினி கட்சி ஆரம்பித்து, அரசியலில் களமிறங்கும்போது, திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் கடுமையான எதிர்ப்பை சம்பாதிக்க நேர்ந்தாலும், அவருக்கு மிகப்பெரிய அசுறுத்தலாக இருப்பது, பாமக ராமதாஸ் மட்டுமே.
ஆட்சியில் இருக்கும் கட்சி, ஆட்சிக்கு வர தயாராக இருக்கும் கட்சி என அனைத்துமே, ரஜினிக்கு எதிராக அடக்கி வாசித்தாலும், பாமக மட்டுமே, ரஜினிக்கு எதிராக தீவிரமாக களமிறங்கிய கட்சி.
பாபா படம் தமிழ் நாட்டில் திரையிட முடியாமல் இடையூறு கொடுத்ததுடன், இன்றும் சினிமா நடிகர்களை, குறிப்பாக ரஜினியை எதிர்ப்பதில் பாமகவே தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.
எனவே, பாமக எதிர்ப்பை சமாளிக்க, வன்னியர் சமூகத்தில் இருந்தே ஒருவரை கட்சியின் பொது செயலாளர் ஆக்கி விட்டால் அதை சமாளித்து விடலாம் என்று ரஜினி கணக்கு போட்டுள்ளார்.
அதற்காக, 1996 ம் ஆண்டு முதலே ரஜினியின் நெருங்கிய நண்பராக இருக்கும், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனை, தமது கட்சியின் பொது செயலாளராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெகத்ரட்சகன், எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அரசியலில் இருப்பவர். ஆர்.எம்.வீரப்பனின் செல்ல பிள்ளை. தமிழ் நாட்டில் உள்ள மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர். கல்வி நிறுவனங்கள், மதுபான ஆலைகள், நிலக்கரி சுரங்கங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் என பலவற்றை நிர்வகித்து வருபவர்.

அத்துடன், வீர வன்னியர் பேரவை என்று ஒரு அமைப்பை நடத்தி, பின்னர் அதை திமுகவுடன் இணைத்து, எம்.பி யாகவும், மத்திய அமைச்சராகவும் ஆனவர்.
திமுக தலைவர் கலைஞருக்கு மிகவும் நெருக்கமானவர். அவர்களது குடும்ப தேவைக்கும் அவ்வப்போது நிதி வழங்குபவர் என, திமுகவின் முக்கிய இடத்தில் இருப்பவர் ஜெகத்.
ஆனால், தமக்கு மாநிலங்களவை எம்.பி பதவி வழங்கவில்லை என்ற வருத்தத்தில் இருந்த ஜெகத்ரட்சகன், கடந்த சில நாட்களாக தீவிர அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்தார்.
கடந்த ஆண்டு, அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடந்த வருமான வரி துறை சோதனைகளும், அவர் அரசியலை விட்டு ஒதுங்கி இருப்பதற்கான காரணங்களாக கூறப்பட்டது.
இந்நிலையில், புதிய கட்சி தொடங்குவதற்காக, ரஜினி தொடர்ந்து நடத்தி வரும் ஆலோசனையில், ஜெகத்தும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
அவர் திமுகவில் இருந்தாலும், நெருங்கிய நண்பர் என்கிற அடிப்படையில், அவர் தொடர்ந்து ரஜினியோடு நெருக்கமாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், ஜெகத்ரட்சகன், தமது கட்சிக்கு பொது செயலாளராக இருக்க வேண்டும் என, ரஜினி அவரை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
ரஜினியை தொடர்ந்து எதிர்த்து வரும் ராமதாஸையும், வன்னியர்களையும் சமாளிக்க, ஜெகத்ரட்சகன் பொது செயலாளராக இருப்பதே சரியான வழி என்று அவர் நினைக்கிறார்.
ஆனால், திமுகவை விட்டு விலக ஜெகத்ரட்சகன் சற்று யோசித்தாலும், கலைஞர் இனி தீவிரமான அரசியலில் ஈடுபட முடியாது என்பதால், ரஜினியின் கோரிக்கையை ஜெகத்ரட்சகன் ஏற்பார் என்றே கூறப்படுகிறது.
