- Home
- Politics
- TN Govt Scheme: தங்கைகளுக்கு கிடைக்கப்போகும் 8 கிராம் தங்கமும், பட்டுப்புடவையும்.! ஜூன் மாதம் முதல் அண்ணன் சீர் திட்டம் நடைமுறை?!
TN Govt Scheme: தங்கைகளுக்கு கிடைக்கப்போகும் 8 கிராம் தங்கமும், பட்டுப்புடவையும்.! ஜூன் மாதம் முதல் அண்ணன் சீர் திட்டம் நடைமுறை?!
தமிழக அரசியலில் "அண்ணன் சீர் திட்டம்" பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் இந்தத் திட்டத்தை ஜூன் 3ஆம் தேதி தவெக அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

8 கிராம் தங்கமும், பட்டுப்புடவையும்
தமிழக அரசியலில் தற்போது அதிகமாக பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது “அண்ணன் சீர் திட்டம்”. திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், பட்டுப்புடவையும் வழங்கப்படும் என்ற தகவல், குறிப்பாக பெண்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
அரசியல் வட்டாரங்களில் வெளியாகும் தகவல்களின் படி, ஜூன் மாதம் முதல் இந்த திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தவெக தரப்பு தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கான முக்கிய அரசியல் காரணமாக ஜூன் 3ஆம் தேதி நடைபெறவுள்ள கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டம் பார்க்கப்படுகிறது.

கலைஞர் பிறந்த நாளில் அமல்
திமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் போல இந்த ஆண்டும் ஜூன் 3ஆம் தேதி கலைஞர் பிறந்தநாளை மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. அரசு நலத்திட்ட அறிவிப்புகள், பொதுக்கூட்டங்கள், சமூகநல உதவிகள் என அந்த நாளை அரசியல் ரீதியாக பெரிய நிகழ்வாக மாற்ற திமுக தயாராகி வருகிறது.
ஆனால் அதே நாளில் “அண்ணன் சீர் திட்டம்” குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட தவெக தரப்பும் திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. “மீடியாவின் முழு கவனமும் அந்த நாளில் எந்த விஷயத்தின் மீது செல்லும்?” என்ற அரசியல் கணக்கில்தான் இந்த நகர்வு என கூறப்படுகிறது.
இது நேரடி நிவாரணமாக அமையும்
குறிப்பாக, “மணமகள்களுக்கு 8 கிராம் தங்கம் + பட்டுப்புடவை” என்ற அறிவிப்பு பொதுமக்களிடம் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. திருமணச் செலவால் சிரமப்படும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு இது நேரடி நிவாரணமாக அமையும் என்பதால், சமூக வலைதளங்களிலும் இந்த திட்டம் குறித்து ஏற்கனவே பெரிய விவாதம் நடந்து வருகிறது.
அதிலும் “அண்ணன் சீர்” என்ற பெயரே மக்கள் மனதில் எளிதில் பதியும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். பெண்களை மையப்படுத்திய உணர்ச்சி அரசியலை கையாளும் முயற்சியாகவும் இதை பலர் பார்க்கின்றனர்.
தவெக வட்டார தகவல்களின் படி, ஆண்டு வருமான அடிப்படையில் தகுதி நிர்ணயம் செய்யப்படலாம் என்றும், முதற்கட்டமாக ஏழை குடும்ப பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. திருமண உதவித் திட்டங்களுடன் இணைத்து இந்த திட்டத்தை செயல்படுத்தும் வாய்ப்பும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது வெறும் தேர்தல் வாக்குறுதியா?
இதற்கிடையில், “இது வெறும் தேர்தல் வாக்குறுதியா? அல்லது உண்மையிலேயே நடைமுறைக்கு வரப்போகிறதா?” என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. காரணம், 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்குவது மாநில அரசுக்கு பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தக்கூடிய திட்டமாக பார்க்கப்படுகிறது.
ஆனால் தவெக ஆதரவாளர்கள் வேறு மாதிரி பேசுகிறார்கள். “பெண்களின் திருமண சுமையை குறைக்க வேண்டும் என்ற எண்ணமே இந்த திட்டத்தின் நோக்கம். இது சாதாரண இலவச திட்டம் இல்லை; குடும்பங்களின் கண்ணீரை துடைக்கும் திட்டம்” என்று அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
“அண்ணன் சீர் திட்டம்” பேசுபொருளாக மாறுமா?
ஜூன் 3ஆம் தேதி கலைஞர் பிறந்தநாள் அரசியல் நிகழ்வுகளை மிஞ்சும் வகையில் “அண்ணன் சீர் திட்டம்” பேசுபொருளாக மாறுமா? உண்மையிலேயே ஜூன் மாதம் முதல் 8 கிராம் தங்கமும் பட்டுப்புடவையும் பெண்களுக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு தற்போது தமிழக அரசியலில் சூடுபிடித்துள்ளது.

