Rajini is announcing that he will come to politics
‘போருக்கு வந்தால் ஜெயிக்கணும்’ என்று அரசியலை யுத்தமாகவே வர்ணித்திருக்கிறார் ரஜினி. இந்த பார்வையை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளரான ரவிக்குமார் தவறான கோணமென விமர்சிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் யுத்தத்தில் முதல் சுற்றில் வெற்றிக் கொடி நாட்டியேவிட்டார் அவர் என்றுதான் சொல்ல வேண்டும்.
எப்படி?...
அரசியலுக்கு வருவேன் என அறிவித்துதான் இருக்கிறார் ரஜினி, இன்னும் அதற்கான முதற்கட்ட வேலையை கூட முடிக்கவில்லை. இந்நிலையில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பதறி தெறிக்கின்றன. யுத்தகளத்தில் எதிராளியை ஒருவன் கொன்றோ அல்லது அடக்கியோ வெல்வது ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் யுத்தம் துவங்கும் முன்பே எதிராளிகளை அதிர வைப்பவன் பெரிய வீரன் தானே!
இத்தனைக்கும் ரஜினி இன்னும் தன் படையை தயார் செய்யவுமில்லை, வாளை கூர் தீட்டவுமில்லை, யானைகளுக்கு அங்குசம் பூட்டவுமில்லை, தானே இன்னும் யுத்த ஆடை பூணவுமில்லை! இந்த சூழலிலே அவரைப் பார்த்து இரு பெரும் கழகங்களும் கலங்க துவங்கியுள்ளன. அதிலும் அவையிரண்டும் பல யுத்தங்களை கண்ட, வென்ற, தோற்ற மாபெரும் படைகள்.
ரஜினியின் வருகையால் பொதுவான வாக்கு வங்கியிலிருந்து தி.மு.க.வுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் கை விட்டு போவது குறித்து ஸ்டாலின் பயப்படுவது ஒரு பக்கமிருக்கிறது. இங்கு, அ.தி.மு.க.விலும் அமைச்சர்களும், துணை முதல்வரும் அலறித் துடிக்க துவங்கிவிட்டனர்.
“ரஜினியின் வருகையால் எங்களுக்கு ஒரு பாதிப்பும் கிடையாது. அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியில் இருந்து ஒரு வாக்கை கூட ரஜினி பெற முடியாது.” என்று ஜெயக்குமார் கொதித்திருப்பதன் பின்னணி அக்கட்சிக்கு ரஜினி வருகை குறித்து உருவாகியிருக்கும் அச்சமே.
’சினிமா டயலாக்கெல்லாம் அரசியலுக்கு செட் ஆகாது. ஒரு இயக்கம் நடத்தும் கஷ்டமெல்லாம் இனிதான் ரஜினிக்கு புரியும்.’ என்று ரஜினியின் ரசிகனான அமைச்சர் செல்லூர் ராஜூ பொங்கியிருப்பதும் அவரது வருகையால் தங்களுக்கு உருவாக உள்ள குடைச்சலின் வெளிப்பாடன்றி வேறேது?
இவர்களையெல்லாம் தாண்டி துணை முதல்வர் பன்னீர்செல்வமே “ ரஜினிகாந்த் திடீரென்று கட்சி துவங்கி போட்டியிட்டால் தோல்விதான் கிடைக்கும்.” என்று கருத்துக்களைக் கூறியிருக்கிறார்.
ஆக, ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்புக்கு அ.தி.மு.க.வின் முக்கிய தலைகள் அத்தனை பேரும் வலியில் குதிப்பதன் பின்னணி ‘அச்சமின்றி’ வேறேது?
ஆக யுத்தத்தில் இறங்கும் முன்பே இரண்டு பெரும் எதிராளிகளையும் நடுங்க வைத்த வகையில் ரஜினி வென்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
